பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவன் ஏன் திருடவில்லை?

587

சத்தம் அவன் காதில் விழுந்தது. திடுக்கிட்ட கணபதி, திறந்த பீரோவைத் திறந்தது திறந்தபடி வைத்துக்கொண்டு அப்படியே நின்றான்.

"அதோ அவரே வந்து விட்டார்!" என்றான் ஆறுமுகம், கணபதியின் நிலையை உணராமல்.

"அதுதான் தெரிகிறதே! அவன் ஏண்டா இந்த நேரத்திலே இங்கே வந்து தொலைந்தான்?" என்றான் கணபதி எரிச்சலுடன்.

"வந்தால் என்ன ஸார், அவரும் நம்மைச் சேர்ந்தவர் தானே?" என்றான் ஆறுமுகம்.

"யார் கண்டது? அவன் எப்படியோ என்னவோ? உனக்கு அவன்மேல் நம்பிக்கை யிருந்தால் உன்னிடமிருக்கும் போர்வையை அவனிடம் கொடுத்துவிடு; நாளை நான் உனக்கு வேறொரு போர்வை தருகிறேன்!" என்றான் கணபதி.

"சரி!" என்றான் ஆறுமுகம்.

"தாத்தா, தாத்தா!

அந்த நேரத்தில் ஆறுமுகத்தின் எதிர்பாராத அழைப்பைக் கேட்டதும் "யாரப்பா அது?" என்றான் கிழவன், தெரிந்தும் தெரியாதவன் போல.

"நான்தான் ஆறுமுகம் தாத்தா! அன்றொரு நாள் உங்களுடன் சேர்ந்து கூடைகூட முடைந்தேனே...?"

"ஓ, நீயா! என்னப்பா, சமாசாரம்?"

"குளிருக்கு ஒரு போர்வைகூட இல்லாமல் நீங்கள் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், இல்லையா? இந்தாருங்கள், உங்களுக்கு ஒரு போர்வை!"

கிழவன் சிரித்தான்; "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டான் ஆறுமுகம்.

"ஒன்றுமில்லை; எனக்குப் போர்வை இல்லை என்று நீ சொன்னாயே, அதற்காகச் சிரித்தேன்!" என்றான் கிழவன்.

"அப்படியானால் உங்களிடம் போர்வை இருக்கிறதா, என்ன?"

"இருக்கிறது தம்பி, இருக்கிறது. ஆனால் அதை உன்னாலும் பார்க்க முடியாது; அந்தக் கணபதியாலும் பார்க்க முடியாது!"

"அது என்ன போர்வை தாத்தா, அப்படிப்பட்ட போர்வை?" என்று கேட்டான் ஆறுமுகம் ஒன்றும் புரியாமல்.

"அது தான் மானம் தம்பி, மானம் அந்தப் போர்வை உள்ளவன் இந்தப் போர்வையை விரும்பமாட்டான்!" என்றான் கிழவன்.