பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வணக்கத்துக்குரியவள்

603

ஆனந்தனிடமிருந்து அதற்குமேல் ஒரு கடிதமும் வரவில்லை, கவிஞருக்கு.

ஒருவேளை இறந்து போயிருப்பானோ? இறந்திருந்தால் தந்தி வந்திருக்குமே, வீட்டுக்கு? இருக்காது......

ஒருவேளை பிழைத்துக் கொண்டிருப்பானோ? பிழைத்துக் கொண்டிருந்தால் கடிதமாவது, வராமற் போவதாவது?.......

அதற்காக அவன் இறக்க வேண்டுமென்று தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் அதற்காக அவன் இறந்துவிடுவானா?

தான் இறந்தாலும் தன் மனைவி வாழ வேண்டும் என்று நினைக்கும் அவன் தான் எவ்வளவு பெரியவன்! அவள் மேல் அவன் கொண்டிருக்கும் காதல் தான் எவ்வளவு பெரிது!

அவன்மேல் அவள் கொண்டிருக்கும் காதல் மட்டும் என்ன, சிறிதளவா இருக்கிறது? நீராயிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு போனால் நெருப்பாக அல்லவா இருக்கிறாள், அவள்?

இதன் முடிவு? அவனது முடிவு தெரியும் வரை இதன் முடிவு எங்கே, எப்படித் தெரியப் போகிறது?

எதற்கும் அந்த வீட்டுப் பக்கம் போய்ப் பார்ப்போமா? போனால் அவள் எப்படி வரவேற்பாளோ?

இப்படியெல்லாம் எண்ணிச் சிறிது நேரம் குழம்பிக் கொண்டிருந்த கவிஞர் காஞ்சிவாணன் கொஞ்சம் துணிந்து அந்த வீட்டுப் பக்கமாக அடி எடுத்து வைத்தார் - ஆசை முன்னால் தள்ள, அச்சம் பின்னால் இழுக்க.

என்ன ஆச்சரியம்! - கேட்டது மட்டுமல்ல; அவரை வரவேற்றதும் அந்த வீட்டு மூதாட்டியின் அலறல்தான்!

"என்னம்மா, என்ன நடந்தது?"

கேட்டார் கவிஞர்; "அவன் போய் விட்டான் என்று தந்தி வந்தது; அதைப் பார்த்ததும் 'ஆ!' என்றாள் இவள். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு பேச்சுமில்லை, மூச்சுமில்லை!" என்றாள் ஆனந்தனின் தாயார், வாடிய மலர்ச்சரம்போல் தன் மடியில் விழுந்து கிடந்த அமுதாவை அவருக்குச் சுட்டிக் காட்டி.

கவிஞர் பார்த்தார்; "நீ என் வாழ்வுக்குரியவள் அல்ல; வணக்கத்துக்குரியவள்!" என்று தன் கண் கலங்க அவள் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வெளியே நடந்தார்.