பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கூலி வேண்டுமா, கூலி?

"டாக்ஸி! ஏ, டாக்ஸி!"

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் நின்று, அங்கே 'விர், விர்'ரென்று வருவதும் போவதுமாயிருந்த டாக்ஸிக்காரர்களைக் கை தட்டி அழைத்து அழைத்து அலுத்துப் போய்விட்டது அரசுக்கு.

தப்பித் தவறி ஓரிருவர் நின்றாலும் சும்மாவா நிற்கிறார்கள்? - 'எங்கே போக வேண்டும்?' என்று கேட்கிறார்கள். அடுத்தாற் போலிருக்கும் ஏதாவது ஓர் ஓட்டலின் பெயரைச் சொன்னால் அந்தக் கிராக்கி 'சப்'பென்று போய்விடுகிறது. அவர்களுக்கு, மினிமம் சார்ஜ் எட்டணா என்று வைத்தாலும் வைத்தான், ரிக்ஷாக்காரனின் பிழைப்பைவிடக் கேவலமாகிவிட்டது, டாக்ஸிக்காரனின் பிழைப்பு! பெட்டி, படுக்கையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு நடையைக் கட்ட வேண்டிய பயல்களெல்லாம்கூட 'டாக்ஸி! ஏ, டாக்ஸி!' என்று கத்த ஆரம்பித்து விடுகிறார்கள்!' என்று முணுமுணுத்துக்கொண்டே போய்விடுகிறார்கள்.

என்ன செய்வான், அரசு? - இருபத்தோராவது தடவையாக எழும்பூர் ஸ்டேஷன் கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் - மணி ஒன்பது!

'இண்டர்வியூ'க்காகத் தன்னை அழைத்திருப்பவர்கள் காலை பதினோரு மணிக்கல்லவா, வந்து தங்களைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்? மணி இப்போதே ஒன்பது என்றால் எப்போது ஓட்டலுக்குப் போய்ச் சேருவது? எப்போது குளிப்பது? எப்போது சாப்பிடுவது? எப்போது போய் அவர்களைப் பார்ப்பது?

இந்தக் காலத்தில் வேலை கிடைப்பது 'குதிரைக் கொம்பா' யிருக்கிறதென்றால், அதற்கான பேட்டி கிடைப்பது முயற் கொம்பாகவல்லவா இருக்கிறது? அந்த முயற் கொம்புக்கே இந்தப் பாடு என்றால், குதிரைக் கொம்புக்கு இன்னும் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ?

டாக்ஸிக்காரர்கள் சொல்வதுபோல நடையைக் கட்டி விட்டால் என்ன? - கட்டிவிடலாம்தான்; ஆனால் ரிக்ஷாக்காரனுக்கும் டாக்ஸிக்காரனுக்கும் இடையே நின்று ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் அந்த எட்டணா அந்தஸ்து, தனக்கும் தன் சமூகத்திற்கும் இடையேயுமல்லவா நின்று தொலைக்கிறது?