பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

620

விந்தன் கதைகள்


அட, பாவிகளா! நல்ல சமயத்தில் கழுத்தை அறுத்து விட்டீர்களே? சினிமா பார்க்காவிட்டால் போகிறது; ஓட்டல் காரனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு ஊருக்காவது போய்ச் சேரவேண்டாமா, நான்?

'அந்தக் கவலை அவர்களுக்கு ஏன் இருக்கப் போகிறது?' என்று முணுமுணுத்துக் கொண்டே 'கியூ'வை விட்டு விலகி நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான் அரசு.

"அங்கே பார்க்காதே; இங்கே பார்!" என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அரசு திரும்பிப் பார்த்தான்; பெருமாள் மீசையை முறுக்கி விட்டபடி அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான்.

"அட, நீயுமா சினிமாவுக்கு வந்திருக்கிறாய்?" என்றான் அரசு, வியப்புடன்.

"ஏன், வரக்கூடாதோ?" என்றான் பெருமாள், இடுப்பின்மேல் கையை வைத்துக்கொண்டு.

"வரக்கூடாது என்று நான் சொல்லவில்லையே?"

"நல்ல ஆளய்யா, நீ! ஏமாந்து எண்பது ரூபா கோட்டை விட்டாலும் விடுவே; ஏமாறாம எட்டணாக்கூடக் குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டியே?"

"அதற்குள் எண்ணிக்கூடப் பார்த்துவிட்டாயா, என்ன?"

"ஆத்திலே போட்டாலும் அளந்து போடுன்னு பெரியவங்க சொல்லி யிருக்காங்களே ஐயா!"

"என்னமோ, அளந்து பார்த்ததோடு நின்றிருந்தால் சரி!"

"நிற்காம ஓடியா போயிட்டேன்? இந்தா, உன் பர்ஸ்! இனிமேலாவது கூலிக்காரர்கள் கேட்பதைக் கொடுத்து விடு; கொடுக்காமல் கோட்டை விடாதே!" என்று அவனை எச்சரித்து, அவனிடமிருந்து எடுத்த பர்ஸை அவனிடமே திருப்பிக் கொடுக்க வந்தான் பெருமாள்.

"தேவலையே, ரொம்ப நல்லவனா யிருக்கிறாயே?" என்று சொல்லிக்கொண்டே பர்ஸுடன் அவனுடைய கையைப் பற்றிப் பக்கத்திலிருந்த போலீஸ்காரரிடம் ஒப்படைத்து விட்டு, “இனிமேலாவது பிரயாணிகள் கொடுப்பதை வாங்கிக்கொள்; 'பிக் பாக்கெட்' அடிக்காதே!' என்று பரஸ்பரம் அவனை எச்சரித்து விட்டுச் சென்றான் அரசு.