பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

632

விந்தன் கதைகள்

"சரி, யோசி! நீ யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் உனக்கும் எனக்கும் ஒரு முடிவு வராமல் இருந்தால் சரி!" என்றான் அவன், சலிப்புடன்.

இம்முறை மட்டுமல்ல; இதற்கு முன் எத்தனையோ முறை ஹேமாவின் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு அலுப்பும் சலிப்பும் அடைந்திருக்கிறான் வாசு. ஆயினும் அவள் மேல் கொண்ட காதலை அவளுக்குக் கல்யாணமான பிறகும் கூட அவனால் கைவிட முடியவில்லை. காரணம், அவளிடமிருந்த பணமா, குணமா, கவர்ச்சியா?-எதுவென்றும் அவனுக்குத் தெரியவில்லை!

இந்த நிலையில்தான் அவனுடைய அதிர்ஷ்டமோ, அல்லது ஹேமாவின் துரதிர்ஷ்டமோ, அவளுடைய கணவன் சீனிவாசன் கண்ணை மூடினான். அதுதான் சமயமென்று தன் காதலுக்குப் புத்துயிர் அளிக்க வந்தான் வாசு. வந்தவனை 'வா!' என்றுகூட அழைக்காமல், "எங்கே வந்தாய்?" என்று கேட்டாள் அவள்.

"உன்னுடைய துன்பத்தில் பங்கு கொள்ள வந்தேன், ஹேமா!" என்றான் அவன்.

"துன்பத்தில் பங்கா!" ஆமாம்."

"அப்படியானால் நீயும் என் தோழிகளைப் போல என்னைக் கட்டிக்கொண்டு அழப்போகிறாயா, என்ன?" என்றாள் அவள் எகத்தாளமாக.

அதற்கும் சளைக்கவில்லை அவன்; "அதற்கு நீ தயாராயிருந்தால் நானும் தயார்தான்!" என்றான்.

"இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை உனக்கு? போ, போ! இன்னொரு முறை இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நீ இங்கே வராதே! போ, போ!" என்று அன்று அவனை விரட்டிக் கதவை அடைத்தவள் இன்று.......

சரித்திரப் பிரசித்தி பெற்ற மும்தாஜ்கூட ஏற்கெனவே ஒருவனின் மனைவியாக இருந்தவள்தான்! அவள் ஷாஜஹானைக் காதலிக்கவில்லை? அந்தக் காதலுக்காக உலகத்தின் எட்டாவது அதிசயமான தாஜ்மஹாலை அவன் எழுப்பவில்லையா?........

இப்படி எண்ணிக்கொண்டே கூடத்தில் மாட்டியிருந்த தன் கணவனின் நிழற் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தாள் அவள்; அப்போதும் அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு!