பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

636

விந்தன் கதைகள்

அந்த 'நாமம் போட்ட பெரியவ'ராக இருந்தால் நேரே உள்ளே வந்து காதும் காதும் வைத்தாற்போல் தபாலைக் கொடுத்துவிட்டுப் போவார். இவன் யாரோ தெரியவில்லை, வெளியே இருந்தபடியே குரல் கொடுக்கிறான்!' என்று முணு முணுத்துக் கொண்டே வராந்தாவுக்கு வந்த ஆத்மநாதன், "உள்ளேதான் வாயேன்!" என்றார் வாசலில் கொஞ்சம் வாலிப மிடுக்கோடு நின்றிருந்த தபாற்காரனை நோக்கி.

"வெளியே 'நாய்கள், ஜாக்கிரதை!' என்று போர்டு போட்டிருக்கிறதே சார், நான் எப்படி உள்ளே வருவேன்?" என்றான் அவன்.

"இந்தக் காலத்து நாய்கள்கூடச் சாப்பிடுவதற்கு மட்டுந்தானே வாயைத் திறக்கின்றன? நீ தைரியமாக உள்ளே வா!" என்றார் அவர், தம் வீட்டு வேலைக்காரர்களின் மேல் தமக்கிருந்த அதிருப்தியை நாயின் வாயிலாகக் காட்டிக் கொண்டே.

அதைப் பற்றி அவனுக்கு என்ன?- அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

"ஆமாம், முன்பெல்லாம் ஒரு 'நாமம் போட்ட பெரியவர்' இந்தப் பக்கம் வருவாரே, அவரை எங்கே இப்போது காணோம்?"

"அவர் ‘ரிடைய'ராகிவிட்டார் சார், அவருடைய மகன்தான் நான்!"

"ஐ ஸீ!"

"மோட்டார் டயர் 'ரிடைய 'ரானால் 'ரீட்ரெட்' செய்து மறுபடியும் உபயோகிக்க முடிகிறது. மனிதன் ‘ரிடைய'ரானால் அவனை எங்கே சார் ரீட்ரெட்' செய்ய முடிகிறது?" என்றான் அவன் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனத்துடன்.

"அது முடியாதுதான்; ஆனாலும் தபாற்காரன் மகன் தபாற்காரனாகத்தானா ஆகவேண்டும்? 'குலத்தொழில் கல்லாமல் வரும்' என்கிறார்களே, அது மாதிரியல்லவா இருக்கிறது இது? ஏன், இப்பொழுதுதான் மத்தியானம் சாப்பாடு இலவசம், படிப்பு இலவசம், எல்லாம் இலவசம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, நீ எஸ். எஸ். எல், ஸி. வரையிலாவது படித்து, குறைந்த பட்சம் ஒரு குமாஸ்தாவாகவாவது ஆகியிருக்கக் கூடாதா?"

"அதெல்லாம் அரசியல் வாதிகளின் பிரசாரத்துக்குப் பயன்படும் அளவுக்கு அடித்தளத்திலுள்ள மக்களுக்கு எங்கே சார், பயன்படுகிறது?"