திருடனுக்கு விடுதலை!
377
"அவங்க 'ப்ரெண்ட்' டாக்ஸியிலே வந்து அவங்களை எப்பவோ அழைச்சிகிட்டுப் போயிட்டாருங்க!" என்றான் அவன்.
"சரி, சரி நீங்களும் எங்கேயாவது போய்த் தொலையுங்கள்!" என்று மனைவியிடம் காட்ட முடியாத கோபத்தை அவர்கள் மேல் காட்டிவிட்டு, அவர் விறைப்புடன் எழுந்தார்.
“எஜமான்.....!" என்று தலையைச் சொறிந்தான் கன்னையா.
"என்னடா?"
"பொங்கலுக்கு....."
"பணம் வேண்டும் என்கிறாயா? ஒரு காலணாக்கூட 'அட்வான்ஸ்' கொடுக்க முடியாது; அப்புறம்.....?”
"அட்வான்ஸ் கேட்கலைங்க; போன மாசத்துச் சம்பளம்...."
"போன மாசத்துச் சம்பளமா.....இன்னுங் கொடுக்கவில்லை?”
"இல்லைங்க!”
"அம்மாவிடம் கொடுத்திருந்தேனே?”
"நெசமாவா! கொடுக்கலைங்களே!”
"அப்படியானால் இரு; அம்மா வந்ததும் போகலாம்."
"அவங்க வர மணி பத்துக்கு மேலே ஆகுங்களே!"
"அதற்குக்கூட என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்? பணம் வேண்டுமானால் இருந்துதான் தீர வேண்டும்."
"சரிங்க!”
கன்னையா வெளியே போய்விட்டான். ஜம்பு குழந்தைகளுக் கெல்லாம் சோற்றைப் போட்டுவிட்டு, படுக்க வைத்து விட்டு தானும் படுத்துக் கொண்டான்.
ஹரனை அவன் சாப்பிடக் கூப்பிடவில்லை. ஏனெனில் அம்மா வராமல் அவர் சாப்பிடமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும்!
மணி பத்து இருக்கும்; வாசலில் 'டாக்ஸி' வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, "குட்நைட்" என்று இரு குரல்கள் ஒலித்தன. 'டாக்ஸி' கிளம்பியது. அம்மா உள்ளே வந்தாள்.