பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருடனுக்கு விடுதலை!

383

"ரொம்ப நல்லாத்தான் இருக்குது, போங்க!" என்றாள் அவள்.

"இனிமே எங்கே போறது?-பழைய பாயை விரிச்சுப் போட்டுப் படுக்க வேண்டியதுதான்!” என்று சொல்லிக் கொண்டே, அவன் மூலையில் இருந்த பாயை எடுத்து விரித்துப் படுத்தான்.

வேலை போன விஷயத்தை மட்டும் அவன் மனைவியிடம் சொல்லவில்லை. "அவளுக்கு இருக்கிற கஷ்டமே போதும்" என்று நினைத்தானோ, என்னமோ!

பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பதுபோல் அன்றிரவு கன்னையா தன்னுடைய பழங்காலத்தைப் பற்றி, யோசித்தான்.

அவனுக்கு கல்யாணமாகிப்பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். நல்ல வேளையாகப் பிறந்த குழந்தைகள் அத்தனையும் உயிருடன் இருக்கவில்லை; எல்லாம் போக ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அதற்கும் அவன் வருடத்திற்கு ஒரு முறைதான்-அதாவது பொங்கலுக்குப் பொங்கல்தான்-புதுச் சட்டை தைப்பது வழக்கம். அந்தச் சட்டைக்கும் இந்த வருடம் வழியில்லை!

இதுவரை அவன் எத்தனையோ இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒர் அக்கப்போர்-அதன் பயனாக அவனுடைய சீட்டைக் கிழித்தல்-அப்புறம் வேலை இல்லாமல் திண்டாடுதல்!

வேலை இருக்கும்போதாவது திண்டாட்டம் இல்லாமலிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இருந்தாலும் திண்டாட்டம்; இல்லாவிட்டாலும் திண்டாட்டம்.

இப்படியே அவனுடைய வாழ்க்கையில் பெரும் பகுதி கழிந்துவிட்டது. இதுவரை அமைதி என்பதையே அவன் தன் வாழ்நாட்களில் கண்டதில்லை. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு போராட்டம், போராட்டம், போராட்டம்!

இந்தப் போராட்டத்திற்குத் துணையாயிருந்ததைத் தவிர தன் மனைவி தன்னிடம் என்ன சுகத்தைக் கண்டாள்? நகை நட்டுக்கள் இல்லாவிட்டாலும், மாற்றிக் கட்ட அவளுக்கு இரண்டு புடவைகளாவது உண்டா? பொங்கலுக்குப் பொங்கல் ஒரு புதுப் புடவை எடுத்துக் கொடுக்கக்கூடத் தன்னால் முடியவில்லையே? இந்த லட்சணத்தில், தான் அவளுக்குச் சர்வ வல்லமையுள்ள புருஷன்!-சொல்லிக் கொள்ளவே வெட்கமாயில்லையா, இது?