பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நேற்று வந்தவள்

395

“இப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து கொண்டிருந்தால் அதற்கு முடிவே இராது"

"அதைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்! நாளைக்கே நான் பிறந்தகம் போய் விடுகிறேன்!"

"நீ சொல்வது கொஞ்சம் கூட நன்றாகயில்லை சரசு! அவள் வரும்போது நானும் ஊருக்குப் போவது, நீயும் ஊருக்குப் போவதென்றால் அதைத் தெய்வம் கூட மன்னிக்காது!-எதற்கும் ஓர் எல்லை உண்டு; என் பொறுமையை அளவுக்கு மீறிச் சோதிக்காதே!"

"என் பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு; என்னையும் நீங்கள் அளவுக்கு மீறிச் சோதிக்கவேண்டாம்" என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு அவள் அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க நடந்தாள்.

அதற்குமேல் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. 'இடையில் ஒரு நாள் தானே, நடப்பது நடக்கட்டும்!’ என்று துணிந்து, நான் பிரயாணத்தை மேற்கொண்டேன்.

மறுநாள் திரும்பி வந்த போது, நல்ல வேளையாக என் மனைவி பிறந்தகத்துக்குப் போய் விடவில்லை. எதையோ பறிகொடுத்தவள் போல் முகத்தை தொங்க விட்டுக் கொண்டு அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தாள். லலிதா கூடத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன, லலிதா! பிரயாணமெல்லாம் செளகரியமாயிருந்ததா?” என்று அவளை நான் விசாரித்தேன்.

"இருந்தது, அண்ணா!" என்றாள் அவள்.

"ஸ்டேஷனுக்கு மன்னியும், மணியும் வந்திருந்தார்களோ, இல்லையோ?”

"இல்லை; நானே 'டாக்ஸி' வைத்துக் கொண்டு வந்து விட்டேன்!”

அவ்வளவுதான்; எங்கிருந்தோ இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சரசு ஒடோடியும் வந்து, "வந்ததும் வராததுமாக இருக்கும் போதே கலகத்துக்கு வழி வைத்து விட்டாயோ? இல்லையோ?-போ: இதற்குத்தான் அத்தனைதுரத்திலிருந்து இங்கே அவ்வளவு அவசரமாக வந்தாயாக்கும்?" என்றாள்.