அன்பும் அருளும்
403
"அபாயம் நீங்கியது!"
அடுத்தாற்போல் எனக்கு எதிரே போட்டிருந்த மேஜையின் மேல் அவள் வானரம் போல் தாவி உட்கார்ந்தாள்.
அவ்வளவுதான்; கடைக்குள் அடைந்து கிடந்தவர்களெல்லாம் அவளை ஏதோ ஓர் அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினார்கள்-அவளும் அவ்வாறு பார்க்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்; பார்த்துச் சிரிக்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்!
அவர்களுடைய சிரிப்புக்கிடையே என்னை நோக்கி, "என்ன உங்கள் உடம்புக்கு?"என்று கேட்டாள் அவள்.
"ஒன்றுமில்லை" என்றேன்.
"பின் ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்?"
"சும்மாத்தான்!”
"பொய்! உங்களுக்குத் தலையைக் கிலையை வலிக்கிறதா, என்ன?”
"ஆமாம்; கொஞ்ச நேரமாகத் தலையை வலிக்கத்தான் செய்கிறது!"
"அதாவது, நான் வந்ததிலிருந்து என்று சொல்லுங்கள்!"
"சே, சே! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கே இப்படி.....?"
"சரிதான்; என்னை இங்கிருந்து சீக்கிரமாக வெளியேற்றச் சதியோ?"
"சரியாய்ப் போச்சு; வந்தவர்களை 'ஏன், என்ன?’ என்று விசாரிக்க வேண்டாமா?"
"ஆமாம், ஆமாம்-அது கிடக்கட்டும், எனக்குக் கொஞ்சம் மல் வேண்டியிருக்கிறது-நானும் 'க்யூ' வரிசையில்தான் நிற்க வேண்டுமா?"
"காலையில் வந்திருந்தால் நின்றிருக்கலாம்; இப்போது தான் கூட்டமில்லையே!-சரி, எத்தனை கெஜம் வேண்டும்?"
"கெஜமாவது! நாலு பீஸ் வேண்டும் ஸார், நாலு பீஸ்!"
"ஹா!"