பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

விந்தன் கதைகள்

எப்படியிருக்கிறது, கதை?-எதற்காக அம்மா என்னை இப்படியெல்லாம் சோதிக்கிறாய்? - உடனே அந்த இடத்தைவிட்டு அப்பால் சென்றுவிட வேண்டும் என்று தோன்றிற்று எனக்கு. "உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்; நான் போய் ராத்திரி சாப்பாட்டுக்கு ஏதாவது தயார் செய்கிறேன்!" என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுந்தேன்.

"உனக்கு என்ன தெரியும்? நீ பேசாமல் இரு; ரத்னாவையே கொஞ்சம் சமைத்துக் கொடுக்கச் சொல்கிறேன்!” என்றாள் அம்மா.

அதை நான் பொருட்படுத்தவில்லை; ரத்னா வேண்டாம்; அவள் சமையல் மட்டும் வேண்டுமாக்கும்! என்று கறுவிக் கொண்டே சமையலறைக்குள் சென்று அடுப்பை மூட்டயத்தனித்தேன். அந்த வாரம் வாங்கிய ஒரு புட்டி மண்ணென்னை வீணானதுதான் மிச்சம்; அடுப்பு எரிந்த பாடாகக் காணோம்!

எரிச்சல் தாங்கவில்லை எனக்கு. கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து வெளியே வந்தேன்; யாரோ'களுக்'கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். சிரித்தவள் அவள்தான்!

அதற்கு மேல் அவள் அங்கு நிற்கவில்லை. சட்டென்று சமையலறைக்குள் நுழைந்தாள்-அடுத்த நிமிஷம் அந்தப் பாழாய்ப் போன அடுப்பு கொழுந்து விட்டெரிந்தது!

அதனாலென்ன, அடுப்பு எரிந்துவிட்டால் மட்டும் போதுமா? முன்பின் எங்கள் வீட்டுக்கு வந்து பழக்கமில்லாத அவள், அரிசி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டாமா? அதற்காவது அவள் என்னுடன் பேசித்தானே தீரவேண்டும்? அந்த சந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் வெளியே நின்று கொண்டிருந்த என்னை அவள் அப்போதும் ஏறெடுத்துப் பார்க்காமல், "இங்கே அரிசி எங்கே இருக்கும்?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்!

நான் மட்டும் அவளுக்கு இளைத்தவனா, என்ன? "இங்கேதான் இருக்கும்!" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்!

அடுத்தாற் போல், “இங்கே கரண்டியைப் பார்த்தாயா, நீலி?" என்றாள் அவள், அங்கே இல்லாத நீலியை நோக்கி!

"இதோ, இங்கேதான் இருக்கிறது நீலி!" என்றேன் நானும், அங்கே இல்லாத நீலியை நோக்கி!