பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


போன்றவை ரோமானியர்களிடையே எடுபடாமல் போயிற்று.

ஆனால், பங்கு பெறுபவர்களைவிட, பார்வையாளர்களாக இருப்பதற்கே ரோமானியர்கள் விரும்பினர். அதிலும், சாதாரணப் போட்டிகளைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு சஞ்சலமாகவும், சங்கடமாகவும் இருந்ததோ என்னவோ, அவர்கள் பயங்கரமான காட்சிகளைப் பார்த்து ரசிக்கத் தலைப்பட்டனர்.

அதனால் மிகக் கொடுரமான பேய்த்தனமான போட்டி முறைகளையே விரும்பிப் பார்த்தனர். அதனால் மிருகங்களை சண்டையிடச் செய்தனர். அதில் ரசனை குறைந்தபோது, மிருகங்களுடன் மனிதர்களைப் போரிடச் செய்தனர். அதிலும் போரடித்த போது, பயங்கர ஆயுதங்களுடன் வீரர்களைப் போட்டியிடச் செய்தனர்.

யாராவது ஒருவர் இறக்கும் வரை கூர்மையான போர் ஆயுதங்களால் சண்டையிடச் செய்து, ரத்தம் கொட்டக் கொட்ட அவர்கள் தள்ளாடி மரணவேதனை அனுபவித்தபோது, பார்வையாளர்கள் கைதட்டி, கோஷமிட்டு மகிழ்ந்தனர்.

அந்தப் போரிடும் இடம், மையத்தில் அமைக்கப் பட்டிருக்க, அதைச் சுற்றிலும் உயர்ந்த மேடை அமைக்கப் பெற்றிருக்கும் இருக்கைகளில் அமர்ந்து அவர்கள் வேடிக்கை பார்த்துப் பேரின்பம் கொண்டனர்.

அந்த மைய இடம், தான் Arena என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், அந்த இடம் மணலால் பரப்பப்பட்டிருந்ததே தலையாய காரணமாகும்.