விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 49
6. தேடலும் தெளிவும்
விளையாட்டுத் துறையில் தமிழ் நூல் எழுத வேண்டும் என்பதை, உள்ளத்தில் உறுதி செய்தாகி விட்டது.
ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது எழுதிக் கொண்டு போய் காண்பிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு தலை சாய்த்தாகி விட்டது.
முன்னோடி நூல்கள் ஏதாவது தமிழில் இருந்தால், முனைப்புகாட்ட முயற்சி கொள்ள முடியும் என்ற நினைவில் என் மனம் ஊஞ்சலாகிப் போனது.
ஆங்காங்கே கிடைக்கின்ற ஆங்கில விளையாட்டுத் துறை நூல்கள், சிலவற்றைக் கண்டுபிடித்து படிக்கத் தொடங்கினேன்.
அதற்கு முன் எதற்காகப் படிக்கவேண்டும் என்ற கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. என்ன புத்தகம் எழுதுவது என்று தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் தானே, குறிப்புக்களைத் திரட்ட முடியும்.கருத்துக்களை நிரப்ப முடியும்.
கதை, கவிதை, நாடகம் எழுதும் பழக்கம் ஏற்கனவே, இருப்பதால், விளையாட்டுத் துறையில் எழுதுகிற முதல் நூலையும், அதே பாணியில் எழுதவேண்டும் என்ற ஒரு யோசனை, பல நாள் சிந்தனைக்குப் பிறகு வந்தது.