பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



93

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


37. இரும்படிக்கும் இடத்தில்!

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது பழமொழி! அப்படிப் போனால் அடிபட்டு சாகும் என்பதுதான் அதன் முடிவாகும் இருக்கும்.

அதுபோலவே, கிரிக்கெட் ஆட்டத்திலே மனிதர்கள்தான் பங்குபெறுவார்கள். விளையாட்டுவீரர்கள் ஆட, அதிகாரிகள் கண்காணிக்க, நடுவர்கள் முடிவெடுக்க, பார்வையாளர்கள் பார்த்து மகிழ, இப்படித்தான் மைதானம் நிரம்பியிருக்கும். அங்கே நாய்க்கும், குருவிக்கும், சுண்டெலிக்கும் என்னவேலை?

1963ம் ஆண்டு ஹோவ் என்னுமிடத்தில் மேற்கிந்தியத் தீவின் குழுவிற்கும், சசக்ஸ் குழுவிற்கும் கிரிக்கெட் போட்டிஒன்று நடைபெற்றது. N.I. தாம்சன் என்பவர் பந்தடித்து ஆடுபவராக இருந்து, பந்தை அடித்தபொழுது, அந்தப் பந்து எல்லை ஓரமாகப் போனது.

வெளியே நின்றுகொண்டிருந்த நாய் ஒன்று, உள்ளே வந்து பந்தை கெளவிக் கொண்டு ஓடிவிட்டது. எல்லைக்கு வெளியே பந்துபோய்விட்டது. நாய் தூக்கிக் கொண்டு ஓடியது சரியல்ல. ஆனாலும் அதற்கு 4 ஓட்டங்கள் உண்டு என்பதாக நடுவர் கூறி, தாம்சனுக்கு 4 ஓட்டங்கள் தந்தார். நாய் அவருக்கு உதவியது என்றாலும், அதற்கு அங்கே வேண்டாத வேலைதானே!

இதுபோல இன்னொரு நாய் உள்ளே புகுந்தபொழுது, என்ன ஆயிற்று தெரியுமா? லார்டுமைதானத்தில் பிரெளன் பிரைட்டன் என்பவர், (1783-1857) மிகவும் வேகப் பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றவர். அவர் எறிந்தபந்துபட்டு, நாய் அதே இடத்தில் உயிரை விட்டுவிட்டது. விளையாட்டுக் களத்தை போர்க்களம் என்று நினைத்து வந்து வீரமரணம் எய்தி, வரலாற்றிலும் இடம் பிடித்துக் கொண்டது அந்த நாய்.