பக்கம்:வீர காவியம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

காட்சிப் படலம்


சுருக்கிட்டு வலித்தார்கள்; கனன்று சீறித்
      துள்ளுபரி கனைத்தமையால் வீரர் அஞ்சி
வெருக்கிட்டு விரைந்தார்கள்; பதுங்கி நின்று
      வெற்றிகொள வஞ்சனையாற் சூழ்ந்து வந்தார்;
‘செருக்குற்ற புரவிதனை அடக்க லின்றித்
      திரும்புகிலோம்’ எனவுரைத்துக் கயிறு வீசிப்
பெருங்குற்ற தோள்வலியாற் பிணித்தி ழுத்தார்;
      பெரும்பொழுது போராடிக் களைத்த தாங்கே 21

கொய்யுளையாற் பொலிபுரவி முகத்தான் மோதிக்
      கொட்புற்றுக் கொட்புற்றுப் புறங்கால் கொண்டு
மெய்யுளைய உதைத்துதைத்துத் துள்ளித் துள்ளி
      மேவலர்தம் பிணிப்பகற்ற இயலா தங்குச்
செய்வழியும் அறியாமற் களைத்த லுத்துத்
      திகைப்புறுங்கால் அவ்வீரர் இறுகக் கட்டி
மெய்ந்நலிய வயந்தநகர்க் கீர்த்துச் சென்றார்;
      மேலவனைப் பிரியாமா பிரிந்த தந்தோ! 22



வலித்தார் - இழுத்தார், கொய்உளை - வெட்டிவிடப்பட்ட பிடரிமயிர் கொட்புற்று - சுழன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/24&oldid=911459" இலிருந்து மீள்விக்கப்பட்டது