பக்கம்:வீர காவியம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

காட்சிப் படலம்


பற்றலர்தாம் தன்னெதிரில் பணிந்து நிற்பின்
      பகைவிடுத்து நகைத்துரிமை பூணல் வீரம்
உற்றவர்தம் கடனாகும்; அதனால் வேழன்
      உளங்கனிந்த வயத்தரசன் வேண்டுகோளால்
செற்றமது தவிர்ந்தவனாய் மூரல் பூத்துச்
      செழுமனையில் விருந்தயர இசைவு தந்தான்;
கொற்றவன்றன் உள்ளமெலாம் மகிழ்வு பொங்கக்
      கோவிலுக்கவ் வேலானை அழைத்துச் சென்றான். 33

பாரகத்தை நடுங்குறுத்தும் மடங்கல் போன்றான்
      பகரரிய பெருவீரன் வருகை கேட்ட
ஊரகத்து மாந்தரெலாம் குழுமி யாண்டும்
உவகையொடு வாழ்த்தொலிகள் எழுப்பி நின்றார்;
தாரடுத்த மார்பகத்தான் களிற்றின் மேலான்
      தலைநிமிர்ந்த தோற்றத்தான் வலமாச் சுற்றிக்
காரடுத்த தலைவாயி லுட்பு குந்தான்;
      கண்விழித்துக் கண்டவர்கள் வியந்து நின்றார்.34


பற்றலர்- பகைவர், மூரல்பூத்து - புன்னகைசெய்து,

குழுமி - கூடி, தார் - மாலை, கார்- மேகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/30&oldid=911489" இலிருந்து மீள்விக்கப்பட்டது