ஓடினோர் கூடினர்
229
என்பதையும் அவன் நட்பின் சிறப்பையும், எடுத்துச் சொல்லிச் சமாதானம் கூறினான். யானை மேலிருந்து இறங்கிய உதயணனைக் கையோடு கைபிணைத்துத் தழுவி, உள்ளழைத்துச் சென்றான் தருசகன். நண்பர்களும் பிற வீரர்களும்கூட, மதிப்போடு அதே முறையில் வரவேற்கப் பட்டனர். தருசகன் மீண்டும் மீண்டும் உதயணனை வாய் ஓயாமல் நிறைய நிறையப் புகழ்ந்து நன்றி கூறினான். அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் தன் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். உதயணன் அப்பொழுதுதான் புதிதாக அங்கே அரண்மனைக்குள் வருபவனைப்போல நடித்தவாறே அதற்கு ஒப்புக் கொண்டான். உதயணனுக்கும் அவன் தோழர்களுக்கும் அது புது இடமா என்ன? ஏற்கெனவே அவர்கள் மாறுவேடத்தோடு வேலை பார்த்த இடம்தானே? படை வீரர்கள் மட்டுதான் அவ்விடத்திற்குப் புதியவர்களாக இருந்தார்கள். பெருமதிப்புக்குரிய விருந்தினர்களாக இப்போது தருசக வேந்தனுடைய அரண்மனையில் அவர்கள் தங்கினர்.
மகத நாட்டு எல்லையில் பாசறைகளில் தங்கியிருந்த போது நள்ளிரவில் நடந்த உட்பகைக் கலவரத்திற்கு அஞ்சி ஒடிய அரசர்கள் அறுவரும், மகத நாட்டு எல்லையைக் கடந்து வெளியேறும்போது அங்கே மலைத் தொடரின் நடுவே இருந்த ஒரே கணவாய் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. மலை வழியில் எல்லோரும் சந்திக்கும் படி ஆயிற்று. ஒவ்வொரு அரசனும் மற்றவனைச் சினத்தோடு பார்த்தான். ஒவ்வொருவனுடைய உள்ளமும் மற்றவனைச் சந்தேகித்துக் கொண்டு குரோதத்தினால் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த உள்ளக் கொதிப்பை, அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்ட முறையே காட்டியது. ஆனால் படையெடுப்பிற்கு முக்கிய காரணனாகிய விரிசிகனுக்கு மட்டும், ‘தங்களைக் கலைப்பதற்கு