தம்பியர் வரவு
269
தருமதத்தன், சத்தியகாமன் என்னும் நால்வரையும் அழைத்து உதயணனுக்குப் படை உதவி செய்வது பற்றி அவர்களிடம் கலந்தாலோசித்தான் தருசகன்.
அநுபவமும் பயிற்சியும் மிக்க தருசக ராசனின் அந்த நான்கு அமைச்சர்களும், தாம் மேற்கொள்ளும் செயல்களில் பிறருடைய உதவியின்றியே வெற்றி பெறும் ஆற்றலும் வன்மையும் உடையவர்கள். நால்வகைப் படைகளோடு அறுபதினாயிரம் வீரர்களையும் அழைத்துச் சென்று தாங்களே ஆருணியரசனிடம் இருந்து உதயணன் நாட்டை மீட்டுத் தருவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். முதலில் அமைச்சர்களையும் படையையும் அனுப்பிவிட்டு, பின்பு உதயணனைப் பதுமாபதியுடன் அனுப்புவது நலம் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான் தருசகன். தன் அமைச்சர்களுள் வருடகாரனைத் தனியே அழைத்து. “வருடகார அறிவும் அநுபவ முதிர்ச்சியும் மிகுந்த உன்னிடம் சில செய்திகளை நான் தனியாகக் கூறவேண்டும். இந்தப் படையெடுப்பின் வெற்றிக்கு உன்னையே நம்பி அனுப்புவது போல, வேறு ஒரு செயலுக்கும் நான் உன்னையே முழு மனத்தோடு நம்பியிருக்கிறேன். அதுதான், உதயணனுக்கு ஒரு சிறு துன்பமும் நேர்ந்துவிடாதபடி காக்கவேண்டிய செயல். இன்னும் வெளிப்படையாகக் கூறவேண்டுமானால், உதயணன் உன் அடைக்கலம் என்று வைத்துக்கொள். பிறரிடம் அடைக்கலம் புகுகின்ற அளவிற்கு உதயணன் சாதாரணமானவன் அல்லன். ஆனால், எனக்காகவும், என் தங்கை பதுமைக்காகவும் என் பொருட்டு நான் அவனை உன்னிடம் உரிய அடைக்கலப் பொருளாக ஒப்படைக்கிறேன். எந்த வகையிலாவது முயன்று ஆருணியரசனை வென்று நாட்டை உதயணனிடம் ஒப்பித்துவிட்டு வரவேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. சூழ்ச்சிகளினாலோ, வெளிப்படையான முயற்சிகளினாலோ இதை