இழந்த பொருள்களின் வரவு
313
வசிப்பதற்கு தனக்குச் சம்மதம்தான் என்று மறுமொழி கூறினான். பின்னர் அவன் உதயணனிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான்.
கோடபதி கைக்கு வந்ததும் ஆருயிர்க் காதலி வாசவதத்தையைப் பற்றிய பழைய நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அந்த யாழைக் காண்கின்ற போதிலும் வாசிக்கின்ற போதிலும் உதயணனுக்கு ஏற்படலாயின. பதுமை அவனுக்கு மிக அருகிலேயே இருந்தும்கூடத் தத்தையைப் பற்றிய இத்தகைய நினைவுகளை அவனால் தவிர்க்க முடியவில்லை. இழந்த பொருள்களை மீண்டும் அடைவதில் ஒரு துயரமும் உண்டு. மீண்டு கிடைத்த அந்தப் பொருளோடு தொடர்புடைய பழைய துயர நினைவுகள் எவையேனும் இருந்தால், அவற்றைத் தவறாமல் நினைவூட்டி விடும் அந்தப் பொருள். கோடபதியால் உஞ்சை நகரத்தில் நளகிரியை அடக்கியது. அதனால் வாசவதத்தையைச் சந்தித்துக் காதல் கொண்டது, யூகியையும் ஒருங்கே இழந்தது முதலிய நினைவுகளை அவன் மனத்தில் படருமாறு செய்தது அந்த யாழ். பிங்கல கடகர்களாகிய தன் தம்பியரை மீண்டும் பெற்றது, கோசாம்பி நகரத்து ஆட்சியை மீண்டும் எய்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக ‘இனிமேல் அது கிடைக்காது’ என்று நம்பிக்கை இழந்துபோன கோடபதி அருஞ்சுகனால் கிடைத்தது ஆகிய இவ்வளவு நிகழ்ச்சிகளுக்காகவும் இன்புற்றிருக்க வேண்டிய உதயணன், இவற்றிற்கு நேர்மாறான பழைய துன்ப நினைவுகளைக் கோடபதியால் நினைவூட்டிக் கொண்டு நெஞ்சங் குழம்பிய நிலையில் சிறிதும் அமைதியின்றி இருந்து வந்தான்.
இங்கே கோசாம்பி நகரத்து நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்க, மகத நாட்டில் உதயணன் புறப்படும்போது, ‘உருமண்ணுவாவை எப்படியும் சங்க மன்னர்களிடமிருந்து விடுதலை செய்து அனுப்புவது தன்னுடைய பொறுப்பு’ என்று அவனுக்கு வாக்களித்திருந்த மகத வேந்தன் தருசகன் அதற்காக முயற்சி செய்தான். உருமண்ணுவாவை விடுதலை