பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இறுமாப்பை அடக்க அதுதான் சரியான வழி” என்று அவள் வெகுளியுடன் கூறினாள். வயந்தகன் அவ்வாறே அவளைப் பலவந்தமாகக் கைப்பற்றித் தேர்மேலேற்றி ஊரறிய பெரிய வீதிகள் வழியாக உதயணன் மாளிகைக்குக் கொண்டு சென்றான். நருமதை தெருவில் போவோர் வருவோரை நோக்கி, “உதயணன் என்னை வலிதிற் கொண்டுசெல்கிறான். இந்த அநியாயத்தைக் கேட்போரில்லையா?” என்று கதறிக் கொண்டே சென்றாள். போகும் வழியெல்லாம் பெருங்கூட்டம்கூடி வேடிக்கை பார்த்தது. நருமதை உதயணன் பெயரைச் சொல்லிப் பழிப்பதையும் எல்லாரும் கேட்டனர்.

நருமதையின் அரற்றுரைகளைக் கேட்ட மக்களிற் சிலர் அவளுக்கு இரங்கி உதயணனைப் பழித்தனர். வேறு சிலர், ‘இவள் எதற்கு இந்த வேஷம் போடுகிறாள்?’ என்று நருமதையைப் பழித்தனர். ‘அழகிற் சிறந்த உதயணனால் விரும்பப்பட இவள் முற்பிறப்பில் தவம் செய்திருந்தாலும் முடியாது. அப்பேறு எளிதில் எய்தப் பெற்ற இவளுக்கு ஏன் துயர்? ஒருவேளை இவள் பெண் தன்மையே இல்லாதவளோ?’ என்று மற்றொரு சாரார் பேசினர். உதயணன் குல ஒழுக்கம் கெட்டதென்றனர் நல்லோர். பலரும் பலவிதமாக வம்பளந்தனர். எங்கும் இந்தச் செய்தி பரவிவிட்டது. உதயணனைப் பற்றிய நல்லெண்ணம் பலருக்கு மாறியது. விரைவில் வயந்தகன் தேரில் நருமதையுடன் உதயணனை அடைந்தான். ஊர்முழுதும் உதயணனைப் பற்றிய வம்பு மொழிகள் கிளம்பின. திருமகள், மழை, மகளிர் மனம் இந்த மூன்று பொருள்களும் ஒரு நிலையில் நில்லாதன என்ற உண்மையைப் பிரத்தியட்சமாகப் பலர்கண்டு அறிந்து கொண்டார்கள்.

உதயணனும் வயந்தகனும் சேர்ந்து செய்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. எந்தப் பழிமொழி எழவேண்டும் என்று அவர்கள் சூழ்ச்சியிலே நினைத்தார்களோ, அதுவே எழுந்தது. அதனால் வாசவதத்தைக்கும் அவனுக்குமிடையே ஏற்பட விருந்த பெரும் பழி நீங்கிற்று. ஒரு பழியை நீக்க வேறு ஒரு