மானனீகை பிழைத்தாள்
367
நிர்மூலமாகச் செய்தால் ஒழிய, என் மனம் திருப்தியுறாது” என்று கூறி, அந்தப் பணிப்பெண்ணை உடனே ஒரு கத்தரிகை எடுத்து வருமாறு அனுப்பினாள். அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் வந்த வயந்தகன், கத்தரிகை எடுத்து வரச்சொல்லி அவள் பணிப்பெண்ணை அனுப்புவதையும் மானனீகை தூணிலே கட்டப்பட்டிருப்பதையும் கண்டுவிட்டான். ‘என்ன நேருமோ’ என்ற அச்சத்தோடு வேகமாகத் தான் கண்ட அக்காட்சிகளை உதயணனிடம் போய்க் கூறுவதற்குப் புறப்பட்டான் அவன்.
வயந்தகன் தன்னை நோக்கிப் பரபரப்போடு ஓடி வருவதைக் கண்ட உதயணன் திடுக்கிட்டான். என்னவோ ஏதோ என்று மனம் பதை பதைத்தது அவனுக்கு ஏற்கெனவே முதல் நாள் இரவு கூத்தப்பள்ளியில் தத்தையிடமே தான் அகப்பட்டுக் கொண்டு ஏமாற நேர்ந்த சம்பவம் வேறு அவன் மனத்தைக் கலக்கியிருந்தது. தனக்கும் மானனீகைக்கும் இடையிலிருந்த இரகசியக் காதலைத் தத்தை புரிந்து கொண்ட சாமர்த்தியமான விதத்தை நினைத்தபோதே அவன் மனம் துணுக்குற்றது. “தத்தை மானனீகையைத் தூணில் கட்டி வைத்து அவள் கூந்தலை அறுத்து அலங்கோலம் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கிறாள்” என்று ஓடிவந்த வயந்தகன் பரபரப்போடு கூறியதும், உதயணன் அளவற்ற வேதனை அடைந்தான். “வயந்தகா! மானனீகையின் ஒரு மயிரைக் கத்தரிகையால் தீண்டினாலும் அப்புறம் என் உயிர் உடலில் நிற்காது! இது உறுதி. எப்படியாவது இதை நீ தடுக்க வேண்டும்” என்றான் உதயணன். அதைக் கேட்ட வயந்தகன், “திடுமென்று வாசவதத்தைக்கு மானனீகையின் மேல் இவ்வளவு சினம் ஏற்படுவானேன்? அப்படி என்னதான் நிகழ்ந்தது?” என்று உதயணனை நோக்கி வினாவினான். “எல்லாம் நீ பந்து விளையாட்டைப் பற்றி வருணித்து என்னை அதைக் காணும்படி அனுப்பியதனால் வந்த வினை