படை வந்தது!
93
உருகினாள். உதயணன் துயர்சூழ நிற்கிறானே என்ற நினைவில் கண்ணிரைத் துளித்தன அவள் கயல் விழிகள். காஞ்சனை, தத்தையைத் தழுவிக் கொண்டவாறே, “உதயணன் துயரை நின் துயராக எண்ணுபவள் நீ! அவனுடைய உயிர்க்கு ஊறு வரின் நீ இறத்தல் ஒருதலை. தந்தையையும் அவன் பெருஞ் செல்வத்தையும் நீக்கிக் காதலனைப் பின்பற்றி வந்த உன்னை விதி இப்படித்தான் நடத்தும் போலும்” என்று இரங்கிக் கூறினாள். இவர்கள் இவ்வாறு துயரில் அழுந்துவதைக் கண்ட உதயணன் இவர்களுக்கு ஆறுதல் கூற விரும்பினான். உடனே அவன் வேடர் தலைவனையும் மற்றவர்களையும் நோக்கி, “உங்கள் விருப்பத்துக்கு மாறாகாமல் வருத்தந்தவிர்ந்து யாங்கள் புதைத்த பொருள்களைக் காட்ட வேண்டுமென்று கருதினால் இப்போதைக்கு என் கைக்கட்டை அவிழ்த்து விடுங்கள். பின்பு வேண்டுமானால் மீண்டும் கட்டிக் கொள்ளுங்கள். அதில் எனக்கு மறுப்பில்லை. இவளுடைய துயரத்தைத் தேற்றிய பின், தீப்புகை ஆறியதும் பொருள்களைப் புதைத்த இடத்தைக் காட்டுவேன்” என்றனன். அதைக் கேட்ட வேடர்கள் முதலில் மறுப்பதுபோன்று கடுமையாக நடந்து கொண்டாலும் இறுதியில் ‘இவன் நம் கையிற் சிறைப் பட்டவன். பொய் சொல்லித் தப்ப எண்ணி இவ்வாறு கூறியிருப்பானாயின் இவனை உயிரோடு விடமாட்டோம். எனவே இப்போதைக்கு இவன் சொல்வதை யெல்லாம் செய்துதான் வைப்போமே’ என்று கருதிக் கைக்கட்டை அவிழ்த்துவிட்டனர். வலையிலிருந்து விடுபட்டுப் பிணையை நோக்கி ஒடும் கலைமானைப் போலத் தத்தையை நோக்கிச் சென்றான் உதயணன்.
அரண்மனைப் பஞ்சணைகளில் பூவனைய மஞ்சங்களிலே துயின்ற வாசவதத்தை, அன்று அங்கே அந்தப் பாலை மணலிலே தளர்ந்து சோர்ந்த வண்ணம் காஞ்சனையின்