இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
87 வெள்ளை யானை
அதுவா உனது பெயர்?
எங்கோ கேட்ட பெயர்
எங்கட்குப் புரியவில்லை
ராம நவமியை
ராவணன் கொண்டாடுதல் போல்
கிருஷ்ண ஜயந்தியைக் கம்சன் கொண்டாடுதல்போல்
எவரெவரோ உனக்கு விழா
எடுக்கின்ற காரணத்தால்
எனக்குள்ளே ஒரு குழப்பம்.
இன்று -
பூதகியின் மார்பிலும்
புத்தமுதம் சுரக்கிறது.
சகுனியின் வாயிலும்
சத்தியம் பிறக்கிறது.
ஆளை விழுங்கும்
மலைப் பாம்பும் இன்றைக்கு
அசுணமா போல மயங்கி விழுகிறது.
உண்மையே பொய்யாய்
பொய்யே உண்மையாய்
நிறம்மாறி நிறம்மாறி
நிற்கும் இக் காலத்தில்
அண்ணலே எங்களுக்குக்
கானல் நீராகவன்றோ
காட்சியளிக்கின்றீர்!
காந்தி.... காந்தியென்று
எங்கோ கேட்டபெயர்!
எங்கட்குப் புரியவில்லை!!