பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

வேங்கடம் முதல் குமரி வரை

கேட்கிறீரே?' என்று அங்கலாய்க்கிறான் மார்ட்டின். அதற்கு இறைவன் சொன்னபதில் இதுதான்: 'அன்பனே! இன்று காலை ஒரு வயோதிக சிப்பாய் வந்தானே அவனை அன்போடு வரவேற்று அவனுக்கு ரொட்டியும் டீயும் கொடுத்தாயே, அவன் யாரென்று நினைக்கிறாய்? நடுப்பகலில் கைக்குழந்தையுடன் ஏழைப் பெண்ணொருத்தி வந்தாளே அவளுக்கு உணவு அளித்துக் குழந்தைக்குப் பால் கொடுத்து, குளிருக்குப் போர்வையும் கொடுத்தாயே, அந்தப் பெண் யாரென்று நினைக்கிறாய்? மாலையில் கூடையில் பழம் விற்றுக்கொண்டிருந்த கிழவியிடம் பழம் திருடி உதைபட இருந்த சிறுவனுக்குப் பிணைநின்று அவனைத் திருத்தி வீட்டுக்கு அன்போடு அனுப்பி வைத்தாயே, அந்தப் பையன் யாரென்று நினைக்கிறாய்? வயது முதிர்ந்த சிப்பாயாக, ஏழைப்பெண்ணாக, திருந்தாத பையனாக வந்தவன் நானேதான். என்னை நீ கண்டு கொள்ள வில்லையா?' என்கிறார். மார்ட்டின் உணர்கிறான். கருணை நிறைந்த இறைவன் என்ன என்ன வேடங்களில் வந்து தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்று நினைந்து நினைந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுகிறான்.

இப்படி ஒரு கதை. லியோ டால்ஸ்டாய் என்ற அறிஞர் 1885ம் ஆண்டிலே எழுதியிருக்கிறார். (இந்தக் கதையின் விரிவைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் டால்ஸ்டாயின் இருபத்து மூன்று கதைகள் என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்) இந்தக் கதை எழுதுவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன்னாலே சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவனே நேரில் எழுந்தருளியிருக்கிறார். ஆனால் வந்த திருக்கோலமோபறையன் உருவில், பக்தர்களை ஆட்கொள்ள இறைவன் எந்த எந்த வடிவத்தில் வருவான் என்பதை யாரால் சொல்லக்கூடும்? எப்படி சோமாசிமார நாயனாரது வேள்விக்கு அவன் எழுந்தருளினான் என்ற முழு