பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

21

செங்காட்டாங்குடி உடையான்

திருத்தொண்டர் பெரிய புராணம் எழுதியவர் சேக்கிழார். அறுபத்து மூன்று நாயன்மாரது சரித்திரத்தை வரலாற்று முறையில் எழுதியிருக்கிறார். தெய்வம் மணக்கும் செய்யுள்களில் சிறந்த பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் கதைகளைச் சொல்கிறார் அவர். அந்தப் புராணத்தில் வரும் நாயன்மார்கள் எல்லோருமே அவரவர் கடைப்பிடித்த காரியத்தில் எத்தனை இடையூறு வந்தாலும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து, வெற்றி கண்டவர்கள். செயற்கரிய செயல்கள் பல செய்தவர்கள். இவர்களில் திருத்தொண்டின் உறைப்பிலே தலை நின்றவர் சிறுத்தொண்டர். அவரது வரலாறு ரஸமானது . ஏன்! கொஞ்சம் பயங்கரமானதும் கூட.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் படைவீரர்களில் ஒருவராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து சேனாதிபதியாக உத்தி யோகம் ஏற்கிறார் பரஞ்சோதி. மகேந்திரவர்மனது மகனான நரசிம்மன் என்னும் மாமல்லனுக்கு உற்ற துணைவனாகப் பணியாற்றுகிறார். காஞ்சி வட்டாரத்தில் சளுக்க மன்னன் புலிகேசி செய்த அட்டூழியங்களுக்குப் பழிவாங்க, மாமல்லன் சளுக்கர்கள் மீது படையெடுத்துச் சென்றபோது, படையை முன்னின்று நடத்திய வீரர் பரஞ்சோதி, சளுக்கர் தலைநகரமான வாதாபியைத் தீக்கு இரையாக்கி வெற்றி கண்டார்.