பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

அரசின் இடத்து மகிழ் வஞ்சி
ஈன்ற ஓர் அத்தி நின்றே

என்று பாடுகின்றார். இப்பாட்டைக் கேட்ட கணிகை சிந்தாமணி, பாட்டு நன்றாயிருக்கிறதே, இதனை ஒரு அந்தாதிக்குக் காப்புச் செய்யுள் ஆக்கலாமே' என்கிறாள். நெற்குன்றவாணரும், 'ஆக்கலாம். அந்தாதிக்குக் காப்பு ஆக்கினால் அரசு இறைக்குப் பொருளாகுமா?' என்கிறார். விஷயம் அறிந்த சிந்தாமணி, அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணம் அத்தனையையும் தானே கொடுத்து, நெற்குன்றவாணரை அந்தாதி பாடச் சொல்கிறாள். திருப்புகலூர் அந்தாதி எழுந்த கதை இதுதான். இந்தச் சிந்தாமணி பிரதிஷ்டை செய்த லிங்கத் திருவுருவே, சிந்தாமணீசர் என்ற பெயரோடு கோயிலுள் இருக்கிறார் இன்றும், கணிகையால் வாணர் வாழ்கிறார். வாணரால் இறைவனே வாழ்கிறார் நம்முடைய உள்ளத்தில்.

இக் கோயிலில் அறுபத்தேழு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன் முதல் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்திய நிபந்தங்கள் அனந்தம். அதனால் இக்கோயில் பெரிய கோயிலாக மட்டும் அல்ல. நல்ல பணக்காரக் கோயிலாகவும் இருக்கிறது. சுமார் 1500 ஏக்கர் நிலம் இக்கோயிலின் சொத்து. ஒரு ஆண்டின் மொத்த வருமானம் ஒன்றே கால் லட்சம், வருமானம் எல்லாம் நல்லமுறையில் செலவு செய்யப் படுகிறது. தஞ்சை மாவட்டத்தின் தலை சிறந்த தேசபக்தர் திரு.M D.தியாகராஜ பிள்ளையவர்கள் இக்கோயில் தருமகர்த்தராக இருந்து மிக்க சிறப்பாகக் கோயிலைப் பரிபாலிக்கிறார்கள். கோணப் பிரான் மட்டுமே இங்கே கோணல், மற்றவைகளில் எல்லாம் கோணலே காண முடியாது.