பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

261

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அனந்தம். பாண்டி மன்னன் கோமாறவர்மன் இரண்டாம் குலசேகரதேவன், விக்கிரம பாண்டியன், கோநேரின்மை கொண்டான் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்கள் பிராகாரச் சுவர்களில் காணப்படுகின்றன. விஜயநகர மன்னர்கள் கல்வெட்டும் இரண்டு உண்டு. மற்றவை எல்லாம் சோழர் காலத்தியவையே. குலோத்துங்கன், வீரராஜேந்திரன், திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான் கல்வெட்டுக்கள் பிரசித்தமானவை. கோயில் சிதைந்தது போலவே கல்வெட்டுக்களும் சிதைந்திருக்கின்றன. என்றாலும் அவை சொல்லும் வரலாறுகளோ எண்ணிறந்தவை, இக்கோயிலைவிட்டு இக்கோயில் உள்ள ஊரைவிட்டு வெளியேறும்போது அந்தக் கங்கை கொண்ட சோழனவன் கனவில் உருவான கங்கையணி வேணியனின் கலைக்கோயில் பொலிவு இழந்து நிற்பது நம் நெஞ்சை உறுத்தாமல் போகாது.