பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வேங்கடம் முதல் குமரி வரை

திருவண்ணாமலை

நான்கு ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள நிலத்தில் அமைந்திருக்கிறது. கோயிலைச்சுற்றி உயரமான மதில். மதிலின் நான்கு புறத்தும் நான்கு பெரிய கோபுரங்கள், கிழக்கே பிரதான வாயிலில் உள்ள ராஜகோபுரம் பதினொரு நிலைகளும் இருநூற்றுப் பதினேழு அடி உயரமும் உடையது. பரத சாத்திரத்தில் உள்ள தாண்டவ லட்சணம் என்னும் நாட்டிய நிலைகள் நூற்று எட்டையும் விளக்கும் சிற்ப வடிவங்கள் இருபக்கத்துச் சுவர்களிலும் நிறைந்து இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் முதலில் நாம் சென்று சேர்வது கம்பத்து இளையனார் கோயில். அருணகிரியார் பிரார்த்தனைக்கு இரங்கி, பிரபுட தேவராயருக்கு முருகப் பெருமான் கம்பத்தில் காட்சி அருளிய இடத்தில் இந்தத் திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு வில்லேந்திய வேலன் மயில் மீது காலையூன்றி கம்பீரமாக எழுந்து நிற்கும் நிலை கலையுள்ளம் படைத்தவர் கண்களுக்கு ஒரு பெரு விருந்தாகும்.

இனி சர்வ சித்தி விநாயகர், பாதாள லிங்கேசுவரர், கோபுரத்து இளையனார் முதலியவர்களைத் தரிசித்த பின் நாம் கடக்க வேண்டியது வல்லாள மகாராஜன் கோபுரம்.