பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வேங்கடம் முதல் குமரி வரை

நடராஜரது நடனத் திருவுருவத்தின் தத்துவங்களை, உண்மை விளக்கம், திருமந்திரம் சித்தியார், சிதம்பர மும்மணிக் கோவை முதலிய நூல்கள் விரிவாகவே கூறுகின்றன என்றாலும், அந்த நடராஜ மூர்த்தியிடமே விளக்கம் கேட்போமானால் அவரும், மாடம் பாவ்லோவாவைப் போல், 'அந்தத் தத்துவங்களை யெல்லாம் இப்படி வார்த்தைகளிலே சொல்லிவிட முடியும் என்றால் நான் ஏன் நடனம் ஆட வேண்டும்?' என்றே நம்மிடம் திரும்பக் கேள்வி போடுவார். சொல்லால் விளக்க முடியாத அற்புதத் தத்துவம் அது. அதை நடனம் ஆடித்தான் விளக்க முடியும். அதற்காகத்தான் அவன் ஆடுகிறான், ஆடுகிறான் அனாதி காலமாக. "வானம் மணிமுகடாய் மால்வரையே தூணாக ஆன பெரும்பார் அரங்காக“ அமைத்துக் கொண்டு ஆடிக்கொண்டே இருக்கிறான். இந்த ஆடும் பெருமானின் அற்புத தரிசனம் காண, தில்லைப்பதிக்கே செல்லவேண்டும். ஆம்! அந்தத் தில்லை என்னும் சிதம்பரத்துக்கே செல்கிறோம் இன்று நாம். தொண்டை நாடு நடுநாடு எல்லாம் கடந்து சோழவள நாட்டுக்குள்ளேயே நுழைகிறோம். சோழ நாட்டிலே இந்த க்ஷேத்திராடனம் தில்லைப்பதியிலேயே துவங்குகிறது மகிழ்ச்சி தருகிறது நமக்கு.

சிதம்பரம் செல்வதற்கு வழி சொல்ல வேண்டியதில்லை. ரயில்வே ஸ்டேஷன்களில் எந்த ஸ்டேஷனில் ரயில் ஏறினாலும், சிதம்பரத்துக்கு என்று ஒரு டிக்கட் கேட்டு வாங்கலாம். சென்னை தனுஷ்கோடி போட் மெயிலில் ஏறினாலும், இல்லை வேறு சாதாரண பாஸஞ்சர் வண்டிகளில் ஏறினாலும் சரி, தஞ்சைக்கும் விழுப்புரத்துக்கும் இடையே உள்ள இந்தத் தலத்துக்கு வந்து சேரலாம் எளிதாக. ரயிலை விட்டு இறங்கியதும் நேரே கோயிலுக்கே செல்லலாம். இரவில் ஊர் வந்து சேர்ந்தால் நண்பர்கள் வீட்டிலோ அல்லது வேறு ஏதாவது தங்கும்;