பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

133

குறைதான். மற்றப்படி பழைய ஆசிரியருக்கு உரிய அத்தனை பாணியும் அப்படியே இருக்கிறது அவரிடம்,

பிரும்மாவும் அப்படியே. தஞ்சை ஜில்லாவிலே, கண்டியூரிலேதான் பிரும்மா இருந்த கோலத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவரை விட அழகான கோலத்தில் இருக்கிறார், இங்கிருப்பவர். இவரது நான்கு முகங்களில் மூன்று முகமே நமக்குத் தெரியும். மற்றொன்று பின் பக்கத்தில் இருப்பதாகப் பாவனை. தென்முகக் கடவுளும் நான்முகக் கடவுளும் உட்கார்ந்திருக்க, துர்க்கை மட்டும் எழுந்து நிற்கிறாள். மகிஷமர்த்தனம் பண்ணிய கோரத் தோற்றத்தைக் காணோம். மிகவும் சாந்தமான நிலை. ஏதோ நடனத்துக்கே புறப்படுவது போல, வலக்காலை வேணுகோபாலன் பாணியில் ஊன்றி, இடக்கையை இடுப்பில் லாவகமாக இருத்தி ஒயிலாக நிற்கிறாள் அவள். இவர்கள் எல்லோருமே உருவாகி இருக்கிறார்கள், கற்சிலையாக. நல்ல சோழர் காலத்துச் சிலா விக்கிரகங்கள் இவை.

இவர்களைக் காணவே ஒரு நடை போகலாம், தக்கோலத்துக்கு. அப்படிப் போனால், அங்கே செப்புச்சிலை வடிவிலும் உமை உருவாகி இருப்பதைப் பார்க்கலாம். கொள்ளை அழகு இவளது வடிவம். மங்கைப் பருவம் தழைத்து நிற்கும் அந்தத்தங்க வடிவினைக் கண்டால், உள்ளம் தழைத்துக் குழையும். தாழ்ந்த இடக் கரத்தையும், அற்புத முத்திரை தாங்கிய வலக் கரத்தையும், புன்னகை தவழும் அதரங்களையும் உருவாக்கிய சிற்பிக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் தலை வணங்கலாம்.

தக்கோலம் என்ற பெயர் இவ்வூருக்கு எப்படி வந்தது என்று சொல்வார் இல்லை. இத்தகைய தக்க கோலங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதனால்தானோ என்னவோ, இந்த ஊருக்குத் தக்கோலம் என்று பெயர் வந்திருக்கிறது. கலை அன்பர்கள் சென்று காண வேண்டிய சிற்பச் செல்வங்கள் அவை