பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வேங்கடம் முதல் குமரி வரை

இதைக் கேட்ட ஓர் அறிஞர் என்னைக் கேட்டார், 'நண்பரே! இவ்வளவும் உண்மையாய் நடந்ததா?' என்று.

நான் சொன்னேன், 'சேக்கிழார் பொய்யே கொல்ல அறியாதவர் ஆயிற்றே. அவர் நடந்ததை யெல்லாம் நடந்தபடியே சொல்லும் புலவர் அல்லவா? அதோடு காஞ்சி கைலாசநாதர் கோயில் வேறே இருக்கிறதே. மேலும் திண்ணனூர் என்று இன்று வழங்கும் திருநின்ற ஊரில் இருக்கும் கோயிலில் இருப்பவர் இருதய கமல ஈஸ்வரர் என்று பெயர் பெற்றவர் ஆயிற்றே. ஆதலால் இவ்வளவு நேரம் சொன்னது அத்தனையும் அப்படியே நடந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன், நான்!' என்றேன்.

அப்போது அறிஞர் சொன்னார்: 'அன்பரே! இப்படி யெல்லாம் நடந்து, அதையே உங்கள் சேக்கிழார் சொல்லியிருந்தால், அவர் ஒரு சரித்திர ஆசிரியர் என்ற . பாராட்டுக்கு மட்டுமே உரியவர். இப்படி ஒன்றுமே நடவாதிருந்து, அத்தனைவிஷயத்தையும் கற்பனை பண்ணிக் கதை சொல்லியிருந்தால் இந்த அரிய கற்பனைக்கு மேலே ஒரு கற்பனை உலக இலக்கியத்திலே கிடையாதே. உள்ளத்தில் இறைவன் இருக்கிறான் என்பதை எல்லாச் சமயவாதிகளும் தான் சொல்கிறார்கள், அந்த உண்மையில் அழுத்தமான நம்பிக்கை இல்லாமலேயே. அப்படி இருக்க, இந்த உண்மையை விளக்க, இப்படி ஒரு கற்பனைக் கதையையே உங்கள் சேக்கிழார் உருவாக்கி இருந்தால், உலகமே அவருக்குத் தலை வணங்கி நிற்க வேண்டுமே!' என்றார்.

உண்மைதானே. 'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்று பாடிய மாணிக்கவாசகரையும், 'மனத்தகத்தான்' என்று பாடிய அப்பரையும் விஞ்சியிருக்கிறார், இந்தப் பூசலார் - மனத்திலேயே கோயில் ஒன்றைக் கட்டி.