பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வேங்கடம் முதல் குமரி வரை

இந்தப் பக்தவத்சலன் கோயிலில் ஸ்ரீனிவாச விமானம் உண்டு. வருண புஷ்கரணி உண்டு. விருத்தக்ஷீர நதிக்கரையிலே உள்ள இந்தப் பெருமாள் வருணனுக்கே பிரத்தியக்ஷமானவர் என்பது புராண வரலாறு.

பெருமாளையும் தாயாரையும் வணங்கிவிட்டுப் பின்னும் கிழக்கே வந்தால், ஒரு சிறிய கோயிலைப் பார்ப்போம். கோயில் வாயிலில் கோபுரம் இருக்காது. உள் நுழைந்ததும், தகரக் கொட்டகை ஒன்றே நமக்குத் தென்படும். இந்தச் சின்னஞ்சிறிய கோயிலில் இருப்பவரே இருதயாலய ஈசுவரர். அவரது துணைவியே மரகதாம்பிகை. இந்த அம்பிகை பின்னமுற்றிருப்பதால் பூசை இல்லை. புதிய சிலா உருவம் தயாராக இருந்தும், இன்னும் பிரதிஷ்டை ஆகவில்லை.

கோயிலில் கர்ப்ப கிருஹத்துக் குள்ளேயே பூசலாரும் சிலை உருவில் இருக்கிறார். மனத்துள் வைத்துப் பூஜித்தவரைக் கர்ப்ப கிருஹத்துள் வைத்துப் பூஜிக்கிறார் இருதயாலயர். இந்தக் கோயிலில் செப்புச் சிலை வடிவிலும் பூசலார் இருக்கிறார். அவரையே பார்க்கிறீர்கள் படத்தில், நீங்களும் நானும் அவரது இருதயத்தில் இருந்த இருதயாலாபரைக் காணத் துடிப்போ மல்லவா? ஆதலால் அவர் லிங்கத் திருவுருவில் பூசலார் மார்பிலே நெஞ்சுக்கு வெளியே இருக்கிறார்.

அரிய கற்பனை கற்பனையாகவே இருந்திருக்கலாமே, இப்படிக் கேலிக் கூத்தாக ஓர் உருவம் அமைந்திருக்க வேண்டாமே என்று தோன்றும். இக்கோயிலில் நால்வர், சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் விஞ்சியவராய்ப் பத்தவத்சலராம் மகா விஷ்ணுவே மோஹினி உருவிலும் இருக்கிறார். ஒன்றரை அடி உயரத்திலே உருவானவர்தான், என்றாலும் நல்ல அழகான திரு உரு. மோஹினியின் முன்னழகைவிடப் பின்னழகு (ஆம், பின்னல் அழகுதான்) பிரமாதம்.