பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வேங்கடம் முதல் குமரி வரை

என்பது பட்டினத்தார் அனுபவம். அந்தக் கரும்பைச்சுவைக்க விரும்புபவர் எல்லோரும் சென்று தொழ வேண்டிய தலமே திரு ஒற்றியூர்.

இந்தத் திரு ஒற்றியூர் சென்னைக்கு வடக்கே ஆறு ஏழு மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய ஊர். கடற்கரையை அடுத்திருக்கிறது. சென்னையின் ஒரு பகுதியான வண்ணாரப் பேட்டையைக் கடந்து காரில் சென்றால் இங்குள்ள கோயில் வாயில் வந்து சேரலாம்.

கோயிலுக்கு வடபுறம் பெரியதொரு தெப்பக்குளம் இருக்கிறது. குளம் இருக்கிறதே ஒழிய, அதில் தண்ணீர் இருப்பது அருமை. குளக்கரையில் தெற்கு நோக்கிய ஒரு பெட்டிக் கடை. அந்தக் கடையை அடுத்து ஒரு சின்னஞ்சிறு சிலை. அதைக் கரும்பேந்திய பட்டினத்தாரோ என்று எண்ணத் தோன்றும். இல்லை. அது காந்திஜியின் சிலை யென்பார்கள் (ஐயகோ! காந்திஜியின் ஜாதக விசேஷமே அப்படி எவ்வளவு பிரபல சிற்பி உருவாக்கினாலும், அவர் சரியாக உருவாவதே இல்லை. காரணம் அவர்களால் அவரது உள்ளத்தில் வீசிய உண்மை ஒளியை உணர முடிவதில்லை. அவ்வளவுதான். சிற்பியின் திறமைக்குப் பழுது சொல்லுதல் கூடாது).

காந்திஜியானாலும் பட்டினத்தடிகளானாலும் இருவரும் வணக்கத்துக்கு உரியவர்கள்தாமே. ஆதலால் அவரை வணங்கிவிட்டு இனிக் கோயிலுக்குள் போகலாம். கோயிலினுள் சென்றதும், நமக்கு முன் எதிர் நிற்பது துவஜ ஸ்தம்பமும் நந்தி மண்டபமும் அல்ல. அவையெல்லாம் ஒரு மகிழ மரத்துக்குப் பிரதான இடம் கொடுத்துவிட்டு தென்புறமாக ஒதுங்கி நிற்கும்.

இது என்ன இந்த இடத்தில் இந்த மகிழடிக்கு இவ்வளவு மகத்துவம் என்று எண்ணுவோம் நாம். அதற்கு விளக்கம்