பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வேங்கடம் முதல் குமரி வரை

எலும்புக் குவியலுக்குள்ளிருந்தல்லவா ஒரு பூம்பாவையை வரவழைக்கிறார்.

அப்படி அவர் எலும்பைப் பெண்ணுரு வாக்கிய தலம் தான் மயிலையிலுள்ள கபாலீச்சுரம் என்னும் கோயில்.

கதை இதுதான். கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் மயிலாப்பூரிலே சிவநேசர் என்று ஒரு வைசியர் இருந்தார். அவர் ஆளுடையப் பிள்ளை அத்தனை சிறு வயதிலேயே தலம் தலமாகச் சென்று இறைவனைப் பாடுவதும் சமணர்களை வாதிட்டு வெல்வதும் ஆகிய காரியங்களைச் செய்து வருகிறார் என்பதை அறிந்து அவரிடம் அளப்பரிய பக்தி செலுத்துகிறார். தம் ஒரே மகளான பூம்பாவையை அவருக்கே மணம் முடித்துக் கொடுக்க எண்ணி, மிகக் கவனத்தோடு வளர்க்கிறார். ஆனால் பூந்தோட்டத்துக்குப் போன இடத்திலே பூம்பாவையைப் பாம்பு தீண்டி விடுகிறது. மரணம் அடைந்த அவளது உடலைத் தகனம் பண்ணி, அந்த எலும்பையும் சாம்பரையும் ஒரு குடத்துள் இட்டுப் பத்திரமாகப் பாதுகாக்கிறார் சிவநேசர்.

சில வருஷங்கள் கழிகின்றன. சிவத் தலங்களைத் தரிசித்து வரும் சம்பந்தர் ஒற்றியூர் வருகிறார். அங்குச் சென்று, சிவநேசர் நடந்ததைச் சொல்லிச் சம்பந்தரை மயிலாப்பூருக்கு அழைக்கிறார். அவரும் வருகிறார். பூம்பாவையின் எலும்புகள் இருந்த பாண்டமும் கோயில் மதில் புறத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. கபாலி கோயிலுக்கு வந்த சம்பந்தர் பாடுகிறார்:

மட்டிட்ட புன்னையுங் கானல் மடமயிலைக்
கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்