பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

191

படங்கொள் பாம்புஅரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதுஒரு கூறனைத்
தொடங்க நின்ற தொழுது எழுவார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே!

என்று அப்பர் பாடுகிறார். தன்னுயிர்க்கு உற்ற ஆதரவாக இறைவனைச் சம்பந்தர் நினைத்தால், நமது வினை மடங்க, அவனையே சரண் புகுகிறார், அப்பர். நாமும் இந்த மருந்தீசனாம் பால் வண்ணனைத் தொழுது திரும்பலாம்.

இக் கோயிலில் செப்புச் சிலை வடிவங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளில் எல்லாம் நல்ல சிறப்புடையது, சோழர் காலத்தே உருவாகிய தென்று கருதப்படுவது, ஆனந்தத் தாண்டவ நடராஜர்தான். அறுபத்து மூவர் எல்லோருமே இங்கில்லை. ஒரு சிலரே செப்புச்சிலை வடிவில் இங்கிருக்கிறார்கள். எல்லோருமே நல்ல இரும்புக் கிராதிகளுக்குள்ளே அடைபட்டிருக்கும் கைதிகளைப் போல, மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களை யெல்லாம் கொஞ்சம் எட்டி இருந்து பார்த்தே திருப்தி அடைய வேண்டியதுதான்.

இக்கோயில் நல்ல சோழர் காலத்துக் கோயில். பின்னர் பல பகுதிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் கோயிலின் பெரும் பகுதி சோழர் காலத்தில்தான் கட்டப் பெற்றிருக்கின்றது என்று தெரிகிறது. அம்மன் கோயில் பழைய நிலையிலேயே இருப்பதால், அங்குள்ள கல்வெட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகளிலிருந்து இக் கோயிலுக்குச் சோழ மன்னர்கள் நிபந்தங்கள் பல ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.