பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

கங்கை கொண்ட சோழன் என்னும் ராஜேந்திர சோழனுக்கு இக் கோயிலிடத்து அதிகச் சிரத்தை என்று அறிகிறோம். அவன் இத்தலத்துக்குப் பல தடவை வந்திருக்கிறான். நிபந்தங்கள் பல ஏற்படுத்தி இருக்கிறான். திரிபுரசுந்தரிக்குத் திருவிளக்கு ஏற்றவும், பால்வண்ணனுக்கு மாலை அணிவிக்கவும். அவன் பொன் நெல் ஆடுகளை யெல்லாம் தானம் வழங்கி இருக்கிறான். அந்திம காலத்தில் அவன் தன் நோய் நீக்கம் விரும்பி, இங்கு வந்து, மருந்தீசரை வணங்கியிருக்கிறான்.

இவன் தன் கால் வழியினனான முதல் ராஜாதிராஜனும், இரண்டாம் ராஜேந்திரனும், ராஜேந்திரனைப் பின்பற்றிப் பல நிபந்தங்கள் ஏற்படுத்தி யிருப்பதாகக் கல் வெட்டுகள் கூறுகின்றன.

சோழ மன்னருக்குப் பின் விஜயநகர மன்னர்களும் இக் கோயிலை நன்கு பரிபாலித்திருக்கின்றனர். இரண்டாம் தேவராயன் காலத்தே அருணகிரி நாதர் இங்கு வந்து இத் தலத்தில் உள்ள முருகனைத் திருப்புகழ் பாடிப் பரவியிருக்கிறார். பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களின் மதி மந்திரியாக இருந்த அப்பைய தீக்ஷிதரும் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். இவரது சிலை கூடக்கோயிலில் இருக்கிறது.

இவ்வளவு சொல்கிறீரே - இந்த வான்மியூரில் வான்மீகருக்கு ஒரு கோயில் இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள். இருக்கிறது. ஐயா! இருக்கிறது. ஆனால் அந்த வான்மீகர் ஆலயம் ஊருக்கு வடமேற்கே ஓர் ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது. ஆனால் அவரது உற்சவ விக்கிரஹம் மருந்தீசர் கோயிலிலேயே இருக்கிறது. வான்மீகியை வணங்கித் திரும்பும் போது, அவர் அளித்த காவியம் நினைவுக்கு வரும். அக் காவியத்தின் சாரத்தை யெல்லாம் வாரி வழங்கிய கவிச் சக்கரவர்த்தி கம்பனுமே ஞாபகத்துக்கு வருவான் அல்லவா?