பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வேங்கடம் முதல் குமரி வரை

மகிஷாசுரமர்த்தனி மண்டபம் என்று பல மண்டபங்கள். எல்லாம் மலைகளைக் குடைந்து நிர்மாணிக்கப் பட்டவை.

ஒரு மண்டபத்திலே வராகருக்கு எதிரே உலகளந்தார். மற்றொரு மண்டபத்திலே மகிஷமர்த்தனிக்கு எதிரே புஜங்க சயனர். இப்படி அழகு அழகான சிற்ப வடிவங்களெல்லாம் Bas relief என்னும் அர்த்த சித்திரச் சிற்பங்கள், இவைகளையே பார்த்துக் கொண்டு, பல்லவர் காலத்துக் கலை வளத்தை வியந்து கொண்டே நிற்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்.

இன்னும் இம் மாமல்லையில் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றனவே. மலை மேல் கட்டிய கோயில், அக் கோயிலை அடுத்துக் கட்டிய கலங்கரை விளக்கம், எல்லாவற்றையுமே ஏறிப் பார்க்கலாம் - நேரமும் காலில் வலுவும் இருந்தால்.

இதற்கெல்லாம் நேரமில்லை யென்றால், விறுவிறுவென்று கீழே இறங்கி, ஐந்து ரதங்கள் என்று கைகாட்டி காட்டும் திசையில் சென்றால், அந்தப் பஞ்ச பாண்டவ ரதங்களைப் பார்க்கலாம். பாண்டவர்களுக்கும் இந்த ரதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றாலும், ரதங்கள் எல்லாம் அழகானலை. பிரும்மாண்டமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியிலே நல்ல வேலைப்பாட்டுடன் செதுக்கப் பட்டவை. எத்தனை சிற்பிகள் எவ்வளவு காலம் வேலை செய்து இந்த அசையாத தேர்களை ஆக்கி முடித்தார்களோ?

இதோடு தீர்ந்து விடுகிறதா? இன்னும் கொஞ்சம் திரும்பி வந்து கிழக்கே பார்க்க நடந்து சவுக்கந் தோப்புகளையெல்லாம் கடந்தால் - அந்தக் கடற்கரைக் கோயிலுக்கே வரலாம். மற்றவையெல்லாம் கற்பாறைகளை வெட்டிச் செதுக்கியதாக இருக்க, இங்குள்ள கோயில்கள் இரண்டு மட்டும் கல்லால் கட்டிய கோயில்களாக இருக்கப் பார்ப்போம்.