பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

247

இந்த மகிழடியையே ஸ்ரீ வைகுண்ட வர்த்தனம் என்று அழைக்கிறார்கள். கம்பன் கண்ட கருணாகரனை, கோதண்ட ராமனை, இளைய பெருமாளுடன் நிற்பவனைத் தரிசித்துவிட்டு வருவதுடன் பெரிய நம்பி, இராமானுஜர், மகிழடி எல்லோரையும் சேவை செய்து திரும்பலாம்.

இந்த மதுராந்தகம் சோழ மண்டலத்தை ராஜராஜனுக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்னும் மதுராந்தகச் சோழனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக விடப்பட்டு, மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் என்று நிலை பெற்றிருக்கிறது.

மூலவர் கோயில் அப்போதே எழுந்திருக்க வேண்டும். பின்னர் வந்த சோழ மன்னர்களாலும் நாயக்க மன்னர்களாலும் விரிவடைந்திருக்கிறது. இதை அர்ச்சகர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மதுரசம் பொருந்திய புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த நகரம் ஆதலால்தான் மதுராந்தகம் என்பார்கள். நாம் அவர்களோடு சண்டைக்குப் போக வேண்டாம்.