பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

55

வசதியாக நின்று தொழுவதற்குமே ஏற்பாடு செய்திருக் கிறார்கள்.

அடுத்த கட்டுத்தான் மூன்றாம் கட்டு. அது மற்றக் கட்டுகளை விட இன்னும் கொஞ்சம் உயரம். இந்தக் கட்டில் ஒரு வாயில். அந்த வாயிலுக்கு நேரே, வள்ளிமலை முருகன், வஞ்சனை இல்லாமல், வள்ளியோடு தெய்வயானையையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே, சிலை உருவில் நிற்கிறான். சின்னஞ்சிறிய வடிவமே என்றாலும், நல்ல அழகான வடிவம். திருத்தணியில் இல்லாத மயில் இங்கு இருக்கும். தன் தலைவன் கால் கடுக்க நடந்து சென்றிருக்கிறானே என்று அறிந்து, பறந்து வந்து சேர்ந்திருக்கும் போலும்!

இந்தக் கர்ப்ப கிருஹத்தின் உச்சியில் உள்ள பாறைமேல் விமானத்தைக் கட்டியிருக்கிறார்கள் குடைவரைக் கோயிலை உருவாக்கியவர்கள் பல்லவர்கள். விமானத்துக்கு முன் மண்டபம் கட்டியவர்கள் பின் வந்த நாயக்க மன்னர்கள். இந்த வள்ளிமலையிலே பல சுனைகள். அதில் ஒரு சுனையிலேதான் வள்ளி நீராடியிருக்கிறாள். அந்தச் சுனைக் கரையிலே வள்ளி அன்று மஞ்சள் உரைத்துத் தேய்த்துக் குளித்திருக்கிறாள். அந்த அடையாளத்தை எல்லாம் இன்றும் பார்க்கலாம்.

இது தவிர, மலை மேலே ஒரு பாறையிலே ஐந்தாறு சமண விக்கிரகங்கள். ஒரு காலத்தில் சமண முனிவர்கள் சிலர் தங்கியிருக்க வேண்டும், இங்கே. இவைகள்தாம் பின்னர் பஞ்ச பாண்டவர் படுக்கை என மக்களால் அழைக்கப் பட்டிருக்கின்றன.

கானச் சிறுமானை நினைந்து
ஏனற் புனமீது நடந்து
காதற் கிளியோடு மொழிந்து சிலைவேடர்