பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

சென்ற சில மாதங்களாக நண்பர் பாஸ்கரத் தொண்டைமான் திருக்கோயில்களைப் பற்றி எழுதி வரும் கட்டுரைகள் தமிழ் நாட்டை ஒரு கலக்குக் கலக்கி இருக்கின்றன. ஏதோ சினிமா பத்திரிகைகளைப் படிக்க மக்கள் அடி பிடி போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ‘கல்கி’யில் கோயில்களைப்பற்றி வரும் கட்டுரைகளைப் படிப்பதில் நான் முந்தி நீ முந்தி!' என்று கணவர்களும் மனைவியரும், கிழவர்களும் குழந்தைகளும் போட்டி போடுவதைப் பார்க்கும்போது அதிசயப்பட வேண்டியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன், ஓர் ஆந்திர நண்பர், சர்க்கார் டாக்டராக இருப்பவர் என்னைப் பார்த்ததும், “ஐயா! உங்கள் நண்பர் தொண்டைமான் பெரிய வம்புக்கார ராயிருக்கிறார். அவர் எழுதும் கட்டுரை ஒவ்வொன்றையும் படித்துவிட்டு, என் மனைவி, உடனே புறப்படுங்கள், வள்ளி மலை வள்ளியைப் பார்க்க வேண்டும்; கச்சி ஏகம்பனைக் காண வேண்டும்; தணிகைக் குமரனைத் தரிசிக்க வேண்டும்!” என்றெல்லாம் உத்தரவு போடுகிறாள். சர்க்கார் உத்தியோகத்திலிருக்கும் எனக்கு ஸ்தல யாத்திரை எல்லாம் கட்டி வருமா? ‘போவோம் போவோம்!’ என்று சொல்லி, என் மனைவியைத் தாஜாப்பண்ணி வைத்திருக்கிறேன்,” என்று சொன்னார்.

இப்படி ஸ்தல புராணங்களும் சமயப் பிரசாரகர்களும் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்திருக்கின்றன. இக் கட்டுரைகள் பக்தியையும் ஆர்வத்தையும் அப்படியே ஊட்டி இருக்கின்றன.