பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அன்னம் வைகும்
வயல் பழனத்தளி ஆரூரானை
மறக்கலும் ஆமோ?

என்பது சுந்தரர் பாடல். மற்றவர்கள் பாடிய பாடல்களெல்லாம் படித்து இன்புற வேண்டியவை. பிற்காலத்தில்லே கமலை ஞானப் பிரகாசர், திருஞான சம்பந்தர் எல்லாம் இப்பகுதியில் தங்கயிருந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். இங்குள்ள கல்வெட்டுகள் அனந்தம். சோழ மன்னர்களது திருப்பணி விவரம் எல்லாம் அவை சொல்லும். பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த முதல் பராந்தகன் முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்த மன்னர்கள் அளித்த நிபந்தங்கள் அனந்தம். அவை விரிக்கில் பெருகும் - இலக்கியப் பிரசித்தி பெற்ற அபயகுலசேகரன் அநபாயன் எல்லாம் இருந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். அதிகம் சொல்வானேன்? திருவாரூர் என்றால் கலை அழகு நிரம்பிய கோயில் நிறை செல்வத்திருவாரூர் என்ற பெருமையோடு விளங்கிய கோயில்.

ஆரூரன் சந்நிதி போல்
ஆரூரன் ஆலயம் போல்
ஆரூரன் பாதத்து
அழகு போல் - ஆரூர்
மருவெடுத்த கஞ்ச மலர்
வாவிபோல், நெஞ்சே
ஒரு இடத்தில் உண்டோ உரை?

என்று ஒருவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறார். அதேகேள்வியையே நானும் கேட்கிறேன் உங்களிடம். சங்கீத மும்மணிகளாம் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி திக்ஷிதர் எல்லாம் பிறந்து வளர்ந்ததும் இந்தத் திருவாரூரே என்றால் இங்கே இசை வளர்வதற்குக் கேட்பானேன்? கலை வளர்வதற்குக் கேட்பானேன்?