பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

105

இந்தக் கோயில் வாயிலில் இருக்கும் துவார பாலகிகளைக் கண்டாலே அச்சம் எழும்.

உள்ளேயுள்ள அஞ்சு வட்டத்தம்மை நம் உள்ளத்தில் அச்சம் பிறக்கும் நிலையில் இருந்தால் வியப்பில்லைதானே. பால சுப்பிரமணியனை, நான்கு திசைகளிலும், வானில் இருந்தும் துயரங்கள் நெருங்காதபடி காக்க அவள் அத்தகைய கோர உருவம் எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. சுதையால் ஆன வடிவம்தான். நமக்கு ஐந்து திசைகளில் இருந்து மாத்திரம் துன்பங்கள் வருவதில்லையே. ஆயிரம் திசைகளிலிருந்து அல்லவா வருகின்றன. அத்தனை துயரையும் தடுத்து நிறுத்தி நம்மை வாழ்விக்க அஞ்சு வட்டத்தம்மை, ஆயிரம் வட்டத்து அம்மையாக உருவெடுக்க வேண்டியதுதான். அப்படி உருவெடுத்து நம் துயர்களைக்களைய அவளை வேண்டிக்கொள்ளலாம். இங்குள்ள இறைவன் கேடு இல்லாதவர் என்று கண்டோம். இவர் மாத்திரம் கேடு இல்லாதவராக வாழ்ந்தால் நமக்கு என்ன பிரயோஜனம்? நமக்கும் கேடு வராமல் காக்க அல்லவா தெரிந்திருக்க வேணும். அந்த வேலையைத்தான் அஞ்சு வட்டத்து அம்மையிடம் கொடுத்திருக்கிறாரே அவர்; அது போதாதா?

இக்கோயில் பழைய கோயில் என்பதனை, இது மாடக் கோயிலாய், கல்லாலேயே விமானம் அமைந்திருப்பதிலிருந்து தெரியும். இன்னும் இங்குள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவசோழன் இக்கோயிலுக்கு அளித்த பூதான விவரம் எல்லாம் தெரியும். தஞ்சை மராத்திய மன்னர்களான துகோஜி மகாராஜா துளஜாஜி மகாராஜாக்கள் எல்லாம் செய்த திருப்பணிகள், அவர்கள் செய்து வைத்த திரு ஆபரணங்களைப் பற்றிய விவரங்களும் தெரியும். இவற்றை யெல்லாம் தெரிய ஆவலுடையவர்கள் ஆற அமர இருந்து ஆராய்ச்சி பண்ணலாம். கேடிலியைத் தரிசிப்பதோடு திருப்தியடைகிறவர்கள் திரும்பி வந்து விடலாம்.