பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வேங்கடம் முதல் குமரி வரை

சேலும் ஆலும் கழனி
வளம் மல்கிய சிக்கலுள்,
வேல் ஒண் கண்ணியினாளை
ஓர் பாகன் வெண்ணெய்ப்பிரான்
பால்வண்ணன் கழல் ஏத்த
நம் பாவம் மறையுமே.

என்பது தேவாரம். சம்பந்தர் சிங்கார வேலவரைப் பாடவில்லை . அருணகிரியார் அவரைப் பாடமறக்கவில்லை

அழகிய சிக்கல்
சிங்கார வேலவா!
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அகரரை வெட்டிச்
சங்காரம் ஆடிய
பெருமானே!

என்பது அவர் பாடும் திருப்புகழ். இன்னும் இந்தச் சிங்காரவேலவன், அவன்றன் தந்தை வெண்ணெய்ப் பிரான், அவன்றன் துணைவி வேல்நெடுங்கண்ணி எல்லோரையும் சேர்த்தே காஞ்சி சிதம்பர முனிவர் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழில் பாடி மகிழ்விக்கிறார்.

சிக்கல் அம்பதிமேவும் சிங்கார வேலனாம்
தேவர் நாயகன் வருகவே!
திகழும் வெண்ணெய்ப் பிரான்
ஒருபால் உறைந்த மெய்ச்செல்வி
பாலகன் வருகவே!

என்பது பாட்டு. இப்படியெல்லாம் பல்லோரும் பாடிப் பரவும் பெருமை வாய்ந்தவன் சிங்காரவேலவனும் அவன் பெற்றோரும்.