பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வேங்கடம் முதல் குமரி வரை

அறைக்குள் தான் நெருக்கி இடம் பிடித்துக்கொண்டு, அந்தக் கோயிலில் செப்புச் சிலை வடிவில் உள்ள தெய்வங்கள் எல்லாம் இருப்பார்கள். இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே நமக்கு முன்பே அறிமுகமானவர்கள்தான் என்றாலும் இவர்களுக்கிடையில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளியிருப்பார். செப்புச் சிலை வடிவில் ஒரு நல்ல வேலைப் பாடு. வேறு ஒரு தலத்திலும் இல்லாதது. இவரையே ஹேரம்ப விநாயகர் என்றும், இவரே சர்வ வல்லமை உள்ளவர் என்றும் சாஸ்திரங்கள் கூறும். இவருடன் வில்லேந்திய வேலன் ஒருவனும் உண்டு. இடது கை வில்தாங்க வலது கை அம்பை விடுகின்ற பாணி. இன்னும் இந்தக் கோயிலில் இரண்டு நடராஜ வடிவங்கள். எல்லாவற்றையும் கலை அன்பர்கள் கண்டுகளிக்கலாம் பல மணி நேரம் நின்று பார்த்து. இத்தனையையும் பார்த்துவிட்டு வெளியே வரலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவருமே வந்திருக்கிறார்கள். மூவரும் காரோணரைப் பாடியிருக் கிறார்கள்.

கருந்தடங் கண்ணியும் தானும்
கடல் தாகைக் காரோணத்தான்
இருத்த திருமலை என்று
இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான்