பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

125

என்றுதானே சௌந்தரராஜனின் அழகை அனுபவித்துப் பாடியிருக்கிறான். இந்தக் கோயிலில் ஆண்டாளுக்கு, மணவாள மாமுனிகளுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதி. இங்குள்ள உற்சவரும் மிகவும் அழகியவர்தான். அத்துடன் ஓர் அழகிய செப்புச் சிலை உக்கிர நரசிங்கருக்கு, இரணியன் உடல் கிழிக்கும் நிலையிலே, அளவில் சிறியதேயானாலும் கலை அழகில் மேம்பட்டது.

கடல் நாகைக் காரோணரைத் தரிசிக்க வந்த நாம், சௌந்தரராஜனையும் அவன் துணைவி சௌந்தர வல்லியையுமே தரிசித்து விட்டோம். இத்துடன் நமது சமரச மனோபாவனை நிற்காது இத்தலத்தில். அந்தக் காலத்திலேயே, சோழ மன்னன் ராஜராஜன் இங்குள்ள புத்த விஹாரத்துக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தையே சாஸனம் பண்ணிக் கொடுத்திருக்கிறான். பௌத்த மதமானது நம் நாட்டில் பிறந்து வளர்ந்தது. பிறநாட்டிலிருந்து வந்த முஸ்லிம், கிறிஸ்துவ சமயத்துக்குமே இங்கு இடமுண்டு. நாகப்பட்டினத்திலிருந்து நாலு மைல் வடக்கு நோக்கி நடந்தால் நாகூரில் மகம்மது மீரான் என்ற பெரியார் அடக்கமாகி உள்ளார். அங்கு நடக்கும்கந்திரி, சந்தனக் குடம், இதில் எல்லாம் கலந்து கொள்பவர்கள் இந்துக்களே, நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி எட்டு மைல் நடந்தால் அங்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். தீரா நோய் தீர்த்தருள வல்லவள் அவள் என்பது பிரசித்தம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, வேளூர் வைத்திய நாதனை யொத்த புகழ் உடையவள், மக்கள் பிணி தீர்க்கும்பான்மையிலே. இங்கும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். நம்பிக்கையில் வளர்வதுதானே பக்தி. அத்தகைய பக்தி இத்தலத்தை ஓட்டி நல்ல சமரச முறையிலே வளர்கிறது என்றால் இதைவிட என்ன புகழ் தான் வேண்டும் இத்தலத்துக்கு?