பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

143

என்று அப்பனையும் மகனையும் சேர்த்துப் பாடியிருக்கிறார். கோடி மறைக்காடு என்ற உடனே நமக்குக் கோடிக்கரை ஞாபகம் வரத்தானே செய்யும். வந்ததே வந்தோம், கொஞ்சம் எட்டி நடைபோட்டு அகத்தியான்பள்ளி சென்று அகத்தீஸ்வரரையும் வணங்கி விட்டுப் பின்னும் நான்கு மைல் சென்று கோடிக் குழகரையும் தரிசித்து விட்டே திரும்பலாமே, கோடிக்கரையில் உள்ள கோடிக்குழகர் பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நவீனம் மூலம் நமக்கு முன்னமேயே அறிமுகமானவர் தானே. சமுத்திர ஸ்நானம் செய்ய விரும்புவர்கள் மாத்திரமே கோடிக்கரைவரை செல்லவேணும். கோயிலுக்கு மட்டும் போக விரும்புபவர்கள் ஒரு மைலுக்கு இப்பாலேயே குழகர் கோயிலுக்குச் செல்லலாம். வழியில் ஒரு மணல்மேடு ஏறி ராமர் பாதத்தையும் தரிசித்துக் கொள்ளலாம். கோடியில் அமிர்த கடேசுரரும் மையார் தடங்கண்ணியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அமுததீர்த்தம் என்னும் கிணறு பிரகாரத்தில் இருக்கிறது. ஒரு விசேஷம். இங்குள்ள சுப்ரமணியர் ஒரே முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டவராய் இருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்து விட்டே திரும்பலாம்.