பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

151

ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே!

என்பதுதானே அவரது திருவாசகம். இரண்டாவது பிரகாரத்தில்தான் பஞ்சாட்சர மண்டபம் என்னும் கனகசபை இருக்கிறது. இந்த மண்டபத்தின் தூண்கள் ஒன்றில்தான் குதிரைச்சாமி இருக்கிறார். ராவுத்தருக்கு உரிய உடையும் அணிந்து நாலுகால் பாய்ச்சலில் செல்லும் குதிரைமேல் ஆரோகணித்து இருக்கிறார். இக்கோயிலில் பல குதிரை வீரர்களது சிலைகள் இருந்தாலும் இந்தக் குதிரைச்சாமிக்கு மட்டுமே பூசை நடக்கிறது. இந்த மண்டபத்தை மாணிக்க வாசகரே கட்டினார் என்பது வரலாறு. மண்டபத்தின் அமைப்பைப் பார்த்தால் மிகவும் பிந்திய காலத்தில்தான் கட்டியிருக்க வேண்டும், என்றாலும் இந்தக் கோயில் முழுவதையுமே மணிவாசகர் கட்டினார் என்று சொல்வதிலே பின்னால் கோயிலை விரிவாக்கியவர்கள் பெருமைப் பட்டிருக்கிறார்கள். இன்று கோயில் திருவாடுதுறை ஆதீனத்தார் ஆளுகையில் இருக்கிறது.

இத்தனையும் பார்த்த பின்னரே தெற்கு நோக்கிய சுவாமி சந்நிதியிலும் கிழக்கு நோக்கிய அம்பிகை சந்நிதியிலும் சென்று வணங்கவேண்டும். மாணிக்கவாசகர் சந்நிதிக்கு எதிரிலேதான் அம்பிகை சந்நிதியிருக்கிறது. அம்மன் சந்நிதியைச் சுற்றிச் சலாகை அடித்த சுவர் இருப்பதால் அந்தச் சுவர்த் துவாரங்களின் வழியாகத் தான் கர்பூர ஹாரத்தியைக் காணவேண்டும். அம்பிகைக்கும் மாணிக்கவாசகருக்கும் ஏககாலத்தில் தீப ஆராதனை நடக்கும். அப்போது மணிவாசகர் பாடிய திருவாசகப் பாடல்கள் எல்லாம் நமது ஞாபகத்து வரும்.

நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனை
சிறுநெறிகள் சேராமே
திரு அருளே சேரும் வண்ணம்