158
வேங்கடம் முதல் குமரி வரை
சத்யபாமையின் தோள்களிலும் வைத்துக் கொண்டு ஆனிரை சுற்றி நிற்கக் கோலாகலமாகக் காட்சி தருகிறான். ராஜகோபாலன் நல்ல வடிவழகு உடையவன். பின்னே விரித்த குழலும், முன்னே முடித்த கொண்டையும், கருணை பொங்கும் கண்களும், புன்முறுவல் பூத்த முகமும் உடையவனாய் இருக்கிறான். வலக்காலை அழுத்தி, இடக்காலைச் சிறிது சாய்த்துச் சதங்கை அணிந்த திருவடிகளோடு காட்சி தருகிறான்.
கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு காதில் தாடங்கமும் ஒரு காதில் குண்டலமும் அணிந்திருப்பது தெரியும். ஐயோ! இது என்ன கோலம்? பெண்கள் அணியும் தாடங்கம் இவன் காதில் எப்படி வந்தது என்று நினைப்போம். இவன்தான் கோலாகலப் புருஷன் ஆயிற்றே, ஹரித்திரா நதியிலே இறங்கி கோபிகைகளுடன் ஜலக்கிரீடை செய்திருக்கிறான். அக்கிரீடைக்கு முன்னர் எல்லோரும் அவரவர் ஆடை அணிகளைக் களைந்து கரையிலே வைத்திருக்கின்றனர். ஜலக்கிரீடை முடிந்து அவசரம் அவசரமாகக் கரையேறி ஆடை அணிகளைத் திரும்பவும் அணிகிறபோது இந்தக்கோபாலன் தெரியாமல் ஒரு கோபிகையின் தாடங்கத்தையே எடுத்து அணிந்து கொண்டிருக்கிறான். அந்தக் கோலத்திலேயே இன்றும் சேவை சாதிக்கிறான். இவன் விட்டு விட்ட குண்டலம் எந்தக் கோபிகையின் காதில் ஏறியிருக்கிறதோ? அத்தனை கோபியரில் அந்தக் கோபிகையை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?
வாசுதேவனையும் ராஜகோபாலனையும் தரிசித்தபின் வெளியே வந்து தென்பக்கம் போய் அங்கு தனிக்கோயிலில் இருக்கும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கலாம். பிருகு மகரிஷி. தவம் செய்து லக்ஷ்மியையே தம் மகளாகப் பெறுகிறார். அவள், ‘மணந்தால் பரந்தாமனையே மணந்து கொள்வேன்' என்று தவமிருந்து வாசுதேவனை மணந்திருக்கிறாள். அவளை வடமொழியில் ஹேமாப்ஜநாயிகா என்று