பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

163

ஒன்றுதான், மேற்கே மராத்திய நாட்டையோ பாண்டுரங்க விட்டல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால் வேங்கடத்தைக் கடந்து தெற்கு நோக்கித் தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டாலோ, அதிலும் காவிரிபாயும் சோழநாட்டுக்கு வந்துவிட்டாலோ இந்த ராமனுக்குத் தான் எத்தனை எத்தனை கோயில்கள்? கும்பகோணத்தில் ஒரு கோயில் என்றால், நீடாமங்கலத்தில் ஒரு கோயில், முடி கொண்டானில் ஒரு கோயில், தில்லை விளாகத்தில் ஒரு கோயில், அடம்பரில் ஒரு கோயில், வடுவூரில் ஒரு கோயில் என்று எண்ணற்ற கோயில்கள் இந்த ராமனுக்கு. இவை தவிரப் பெருமாளுக்கு என்று எடுத்த திருப்பதிகள் அத்தனையிலும் ராமனுக்கு என்று ஒரு தனிச் சந்நிதி. இவ்வளவுதானா? அந்த ராமனுக்கு வேங்கடராமன், கோசலராமன், ரகுராமன், சுந்தர ராமன், கல்யாண ராமன், சந்தானராமன், கோதண்ட ராமன் என்னும் எண்ணற்ற திருப்பெயர்கள், இப்படிக் கங்கைக் கரையில் பிறந்து வளர்ந்தவனைக் காவிரிக் கரையில் நிலைத்து நிற்கச் செய்தவன் கலிச்சக்கரவர்த்தி கம்பனே என்றால் மிகையில்லை. கம்பனோ ராமனை அந்தமில் அழகனாகக் காண்கின்றான்; விற்பெருந்தடந்தோள் வீரனாக மதிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலாக அவனது அவதார ரகசியத்தையும் உணர்ந்து, அவனே மூவர்க்கும் மேலான பரம்பொருள் என்று கொண்டாடுகிறான்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர்
மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த
காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும், மலரும், வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்