பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

வேங்கடம் முதல் குமரி வரை

இப்படி யெல்லாம் மனைவியர் பலரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாரே, இதுசரிதானா என்று ஒரு கேள்வி, கண்ணனாகக் கோகுலத்தில் அவதரித்தபோதும் இவர் எண்ணிறந்த கோபியரது காதலனாக வாழ்ந்திருக்கிறாரே. பெருமாளைப் பதியாக உடைய உயிர்களாகிய பக்தர்கள் எல்லோரும் எப்போதுமே தவங்கிடக்கிறார்கள். அருளாளனான பெருமானும் அவர்களை யெல்லாம் தன் காதலிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை, இந்தத் தத்துவ உண்மையை விளக்குவதற்கே இத்தனை திருவிளையாடல்கள் என்று மட்டும் நாம் தெரிந்து கொண்டால் உண்மை என்ன என்று விளங்கும் அல்லவா?

அரங்கனையும் அவனது துணைவியரையும் தரிசித்து விட்டுத் திரும்பி வெளியே வரும்போது கலை அன்பர்கள் கண்டுகளிக்க வேண்டிய சிறிய கோயில் ஒன்று இங்கு உண்டு. அதுதான் ரங்க மண்டபத்தை அடுத்த வேணுகோபாலன் சந்நிதி. அங்கே உள்ள வேணுகோபாலனை விட அவனைச் சுற்றி நிற்கும் கோபியர்கள் அழகு அழகான சிற்ப வடிவத்தினர். அரங்கத்து அரவணையான் கோயில் சரித்திரத்தைப்பற்றி எளிதாகச் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை. ராமானுஜர், கோயில் நிர்வாகத்தைச் சீர்செய்திருக்கிறார். மணவாள மாமுனிகள் கைங்கர்யங்கள் பல செய்திருக்கிறார். விஜயநகர சாம்ராஜ்ய நாயக்க மன்னர்களே கோயிலை விரிவாகக் கட்டிப் பல நிபந்தங்கள் ஏற்படுத்திச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்.

இந்த அரங்கத்து அரவணையானை ஆழ்வார்கள் எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பதின்மர் பாடிய பாண்பெருமாள் என்ற புகழ் இவர் ஒருவருக்குத்தானே.

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்